"ஒருகால் சுதந்தரத்தின் ஆனந்தத்தையும் முழுப் பயனையும் கிளியினால் உயரப் பறந்து எடுத்துக் காட்ட முடியாதென்றிருக்குமோ? மனிதன் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டு கூரிய மதியின்றி, கூண்டுக்குள் இருக்கத் தகுதி தான் என்று மழுங்கிக் கிடப்பதாலிருக்குமோ?"
"என்னமோ? அதனால் தான் பெண்களைக் கிளிகளுக்கு ஒப்பாக்குகிறார்கள்; கிளிக்குச் சுதந்தரம் கொடுப்பதையும் பலர் விரும்பவில்லை..." என்று தனக்கே உரிய வகையில் பொருள் காண்கிறார் கமலம்மா.
"எப்படியானாலும் இந்த மாதிரி நன்றாக இருக்கிறது கமலம்மா. சுதந்தரம் வேண்டும்! கிளிகளுக்குச் சுதந்தரம் வேண்டும்! ஆனாலும் அந்தச் சுதந்தரம் ஒரு வரையறைக்குள் செயல்பட வேண்டும்!"
யமுனாவின் குரலில் உற்சாகம் பொங்குகிறது. கமலம்மா உளம் நெகிழ்கிறார்.
"இந்த நாலு கோட்டு வரையறை இருக்கிறதே, கமலம்மா! இதற்கும் பொருள் இருக்கிறது, உங்களுக்கு நினைப்பிருக்கா கமலம்மா! சபர்மதி ஆசிரமத்தில் இருந்த போது, காந்திஜி, அப்பா எல்லோரும் தினமும் மாலையில் நடக்கப் போவார்களாம். சிறைச்சாலை மதில்சுவர் வரையிலும் போய்த் திரும்புவார்களாம். அப்பாவிடம் அந்த மதிலைக் காட்டி பாபுஜி, "சிறையில் இருக்கும் போது தாம் விடுதலையை இழந்து விட்டதாக நினைக்கிறோம். ஆசிரமத்தில் விடுதலையுடன் இருக்கிறோம். இந்த மதில் புறத்தே தெரியும் சுவர் அதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆசிரமத்தில் இதைப் போல் புறச் சுவர்களில்லை. ஆனால் அகத்தே சத்தியம், எளிமை, தியாகம், அஹிம்சை ஆகிய நற்பண்புகளைச் சுவராக எழுப்பிக் கொண்டாலே நாம் விடுதலையின் முழு இன்பத்தையும் பயனையும் பெற முடியும்" என்பாராம். விடுதலை, தீய சக்திகளுக்கும் எழுச்சி கொடுத்து விடக்கூடும் என்பதை அவர் வலியுறுத்தி இருக்கிறார். விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மற்றுமில்லை என்று கூறி இருக்கிறார். தனி மனிதனின் ஒழுக்க உயர்வினாலேயே ஜனநாயக அரசு வெற்றிகரமாகச் செயல்பட முடியும். இதை விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் தலைவர்கள் பிடியாகப் பற்றி இருந்தால் இன்று இப்படி ஒரு சீர்கேடு வந்திருக்குமோ?"