சொல்லியிருக்கிறேன்."
"எப்ப? மணி இப்போதே பன்னிரண்டரை. ஒரு பஸ் பிடிச்சு, இரண்டு பஸ் பிடிச்சில்ல போகணும்? உள்ளே வாங்கோ ஒரு காப்பி இல்லாட்டா வேறு ஏதானும் சாப்பிடலாம்..."
மழைக்கு நின்ற இடம் ஓட்டல் படிதான் என்பதை அவள் இப்போதுதான் கவனிக்கிறாள். மழை பெய்தாலும் உள்ளே புழுக்கத்துக்குக் குறைவில்லை.
'குடும்பம்' என்ற தடுப்புக்குள் செல்கின்றனர். அந்த நேரத்தில் சாப்பாட்டுக் கூட்டமே அதிகம்.
"நீங்க காப்பி வேண்டாம்னா, என்ன சாப்பிடறீங்க? ஏம்பா? ரெண்டு ரோஸ் மில்க் கொண்டு வா" என்று அவளைக் கேட்டும் மறுமொழியை எதிர்பாராமலும் பணிக்கிறான்.
உலர்ந்த நெஞ்சுக்கும் புழுக்கத்துக்கும் அந்தப் பானம் இதமாகத்தான் இருக்கிறது. அவன் 'ஸ்ட்ரா'வைத் தூக்கி எறிந்து விட்டு ஒரே மூச்சில் டம்ளரைக் காலி செய்கிறான். கைக்குட்டையால் நெற்றியை ஒத்திக் கொண்டு, "மிஸ் யமுனா, நீங்க நிச்சயமா அரசியல் உலகுக்கு வந்துதான் ஆகணும்" என்று புன்னகை செய்கிறான்.
"நான் சும்மா முகஸ்துதி பண்ணுறேன்னு நினைக்காதீங்கோ. நீங்க ஒரு வயிரம். பட்டை போட்டுட்டா அரசியல் வானில் உதய நட்சத்திரம். உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, கிளாமர் எல்லாம் இருக்கு. உங்களை எப்படி உருவாக்கணும்கறதை நான் உங்களைக் கண்ட போதே திட்டம் போட்டுட்டேன். என்ன சொல்றீங்க...?"
இன்னும் பாதி தம்ளர் கூட உள்ளிறங்கவில்லை. குத்துவிளக்கின் சுடர்போல் ஓர் அடக்கமான புன்னகை அவள் முகத்தில் விளங்குகிறது.
உண்மையில் தீராத மற்றும் மரணத்துக்கஞ்சாத நேர்மையும், எளிமையுந்தான் தேவையென்று சொல்ல வந்த அவள் இந்த வகையில் தான் பிறரைக் கவருகிறாளா?
"ஏன் சிரிக்கிறீர்களிப்ப?"