அம்மா செத்து விட்டாள். நான்தான் அவனைப் பாலூட்டிச் சோறூட்டி வளர்த்தேன். அந்தப் பாசம் பொல்லாதது. சாமண்ணா சின்னப் பையனாக இருந்தபோது, இப்படி யாராவது எங்காவது வெளியூர்க்கு அழைத்துக் கொண்டு போனால் தம்பியைப் பற்றியே எனக்குக் கவலையாக இருக்கும்.
"சந்திரன் அப்பாவை நீங்கள் தான் வளர்த்தீர்களா?"
"ஆமாம்’பா."
"அதனால்தான் அவரை நீங்கள் குழந்தை குழந்தை என்று கூப்பிடுகிறீர்களா?"
"ஆமாம் வேலு."
அப்போது சந்திரன் காலை நீட்டி என்மேல் கைகளை வைத்து அழுத்தித் திமிர்விட்டான். "யார்? அத்தையா? ஏன் அத்தை! வெந்நீர் வைத்துவிட்டேன் என்று சொல்கிறாயா? தோப்புக்குப் போய்வந்து அப்புறம் குளிப்பான்" என்றான்.
"இன்றைக்கு" என்று நான் வாயெடுப்பதற்குள், "வேலு! அத்தை சொன்னபடி கேள்; சும்மா இரு" என்று என்னைக் கண்ணாலே உருத்துப் பார்த்தான்.
அவன் கருத்தைத் தெரிந்து கொண்டு நான் பேசாமல் இருந்தேன்.
தோப்புக் காவலாள் சுரைப்புருடை வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தான். பல்லை அவசர அவசரமாகத் துலக்கிவிட்டு கிணற்றினுள் இறங்கினேன். காவலாள் எனக்கு முன் இறங்கி அந்தச் சுரையை என் இடுப்பில் கட்டினான். "தயங்காமல் இறங்குங்கள். இறங்கிப் பாருங்கள்" என்றான். மெல்ல மெல்ல முழங்காலளவு நீரிலிருந்து இடுப்பளவிற்கு இறங்கினேன். சுரை என்னைத் தூக்குவதை உணர்ந்தேன். ஒருவகைப் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் பிறந்தன. காவலாளும் சந்திரனும் எனக்கு முன் நீரில் சென்றார்கள். துணிந்து வரச் சொன்னார்கள். எனக்குத் துணிவு வரவில்லை. கை கொடு என்று காவலாள் சொக்கான் என் கையைப் பிடித்தான். நீரில் மிதந்தேன். கைகால்களை அடிக்கச் சொன்னார்கள். சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் துணிவு வந்தது. பெற முடியாத ஒரு