(Reading time: 23 - 45 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

பாட்டை விட இரண்டாம் பாட்டை நன்றாகவே பாடினார்கள். ஆனால் நாணம் அவர்களைத் தடுத்தது. சந்திரனிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு போய் மாசன் அவர்களிடம் கொடுத்தான்.

   

சந்திரன் நடந்துகொண்ட முறையும், காசு கொடுத்துப் பாடச் செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன குற்றம் என்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உணர்ந்தேன். கற்பகத்தையோ மணிமேகலையையோ இப்படி யாரேனும் வழிமறித்துக் காசு காட்டிப் பாட வைத்திருந்தால், சந்திரனும் பொறுக்கமாட்டான்; நானும் பொறுக்கமாட்டேன். இதை நான் உணர்ந்தேன்; சந்திரனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை.

  

கொண்டுபோயிருந்த சோற்றையும் வடையையும் தின்று முடித்தபின், சிறிது நேரம் படுத்திருந்து, எழுந்து வண்டி பூட்டினோம். பொழுதோடு வந்து சேர்ந்தோம். வீட்டில் கற்பகத்தை கண்டபோது அவள் முகத்தில் ஒரு வகை ஏமாற்றம் இருக்க கண்டேன்.

  

மறுநாள் காலையில் எழுந்ததும் தோப்பை நோக்கி ஆர்வத்தோடு நடந்தேன். முன்போலவே அவசரமாகப் பல் துலக்கிவிட்டு, சுரையைக் கட்டிக் கொண்டு நீரில் இறங்கிச் சுற்றிவந்தேன். சுரையின் கயிறு வயிற்றை இறுக்கினாற்போல் தெரிந்தது. அதை அவிழ்த்து நெகிழ்த்திக் கட்டுமாறு காவாலாளுக்குச் சொன்னேன். அவன் சுரையை அவிழ்த்த சமயம் பார்த்து, சந்திரன் என்னை நீரில் தள்ளிவிட்டான். நான் பயந்து முழுகி இரண்டு விழுங்குத் தண்ணீரும் குடித்து விட்டுக் கரை சேர முடியாமல் தடுமாறினேன். காவலாள் சொக்கன் உடனே பாய்ந்து என்னைத் தாங்கிக் கொண்டான். கரையில் வந்தவுடன், சந்திரனைப் பார்த்து, "என்னைக் கொன்றுவிடப் பார்த்தாயே" என்றேன்.

  

"பக்கத்திலேயே நானும் சொக்கானும் இருக்கும்போது நீ முழுகிப் போகும்படி விடுவோமா?" என்றான்.

  

"ஏன் அப்படித் தள்ளினாய்?"

  

"அப்போதுதான் பயம் போகும்; நீந்த முடியும்."

  

"அய்யோ! இனிமேல் அப்படிச் செய்யாதே."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.