"சே! இப்படிப் பயந்தால் எப்போதுதான் நீந்தக் கற்றுக் கொள்ளப் போகிறாய்" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் பிடித்துத் தள்ளிவிட்டான்.
இந்த முறையும் முழுகித் தண்ணீர் குடித்து எழுந்தேன். சொக்கான் பாய்ந்து தாங்கிக் கொண்டான்.
"உள்ளே போய் மேலே வந்தாய் அல்லவா? கையை அடித்துக்கொண்டாய்; மேலே வந்துவிட்டாய். அதுதான் நீந்துவதற்கு முதல் பாடம்" என்றான்.
அவன் சொன்னது போல் பயம் ஒருவகையாய்த் தெளிந்தது. ஆனாலும் சுரை கட்டும்படியாக மன்றாடினேன். முந்திய நாளைவிட நன்றாக நீந்தினேன்.
அடுத்தநாள் சுரை இல்லாமலே இறங்கவேண்டும் என்ற ஆசை எனக்கே ஏற்பட்டது. அவ்வாறே செய்தேன். சொக்கானை முன்னே போய் நீரில் நீந்தும்படியாகச் செய்து விட்டுப் பின்னே நான் நீந்தினேன். பயம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. தண்ணீரும் தரைபோல் ஆயிற்று. அரிய வித்தை ஒன்றைக் கற்றுக்கொண்ட பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினேன்.
அன்று அத்தையைப் பார்த்தவுடன் சந்திரன், "அத்தை! வெந்நீர் வேண்டா, கிணற்றிலேயே குளித்துவிட்டான். நீந்தவும் கற்றுக் கொண்டான்" என்றான்.
அத்தை மோவாய்மேல் வைத்த கையை எடுக்காமல் மரம் போல் நின்றார். "அவனுடைய அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால்" என்றார்.
"மகன் நீந்தக் கற்றுக் கொண்டதற்காக ஆனந்தப்படுவார்கள்" என்றான் சந்திரன்.
அத்தை என்னுடைய தலையைத் தொட்டுப்பார்த்து, "இன்னும் ஈரம் போகவில்லையே" என்று தன் முந்தானையால் துவட்டினார்.
மேலும் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊர்க்குப் புறப்பட்டேன். சிலவகைத் தின்பண்டங்கள்