"இங்கே வா" என்று நான் உரக்கக் கூவினேன். எதிரொலியும் அவ்வாறே கேட்டது. உடனே, "வரமாட்டோம்" என்ற குரலும், அதன் எதிரொலியும் கேட்டது. யாருடைய குரல் என்று திரும்பிப் பார்த்தோம். மற்றொரு பாறையில் அந்த இரு சிறுமிகளும் நின்று கொண்டு அப்படிக் கத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். "ஏ பசங்களே!" என்று சந்திரன் கூவினான். எதிரொலியும் கேட்டது. "ஏ அய்யா" என்று அந்தப் பெண்களின் குரலும் அதை அடுத்து எதிரொலியும் கேட்டது.
சிறிது நேரம் அங்கே இருந்தபிறகு, கீழே இறங்கினோம். அந்தப் பெண்களும் இறங்கி வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தபோது சந்திரன் அவர்களைப் பார்த்து, "இங்கே வாங்க" என்றான். கரவு அறியாத அந்தப் பெண்களும் அவ்வாறே வந்தார்கள். "ஏற்றப்பாட்டு, கும்மிப்பாட்டு ஏதாவது பாடுங்கள்" என்றான்.
"ஆடு எங்காவது போய்விடும். நாங்கள் போகணும்" என்றாள் ஒருத்தி. "எங்களுக்கு பாட்டுத் தெரியாது" என்றாள் மற்றவள்.
"அன்றைக்குப் பாடினீர்களே, தெரியும். பாடுங்கள்" என்றான் சந்திரன்.
அவர்கள் மறுத்தார்கள்.
"நான் யார் தெரியுமா? பெருங்காஞ்சி - பெரிய வீட்டு மகன் தெரியுமா?" என்றான் சந்திரன்.
"தெரியும்; இப்போது பாடமாட்டோம்" என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி, "வாடி போகலாம்" என்று நடந்தாள்.
"பாடாவிட்டால் விடமாட்டோம். இதோ பார், ஆளுக்கு ஓர் அணா தருகிறேன். பாடுங்கள்" என்று சட்டைப்பையிலிருந்து இரண்டு அணா எடுத்து நீட்டினான்.
"பாடுங்கள் சும்மா. வெற்றிலைக்குக் காசு கிடைக்குது" என்றான் மாசன்.
அந்தப் பெண்களும் நாணத்தோடு ஒருத்தி முகத்தை மற்றொருத்தி பார்த்துக்கொண்டு தயங்கித் தயங்கிப் பாடினார்கள். ஒரு பாட்டு முடிந்ததும். இன்னொரு பாட்டு என்று கேட்டான். முதல்