"உயர்ந்த மக்கள் சிலருக்கு அது உண்மையாக இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர்களுக்குத் தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டால் நட்புக் குறைந்து போகிறது. இளமையில் என்னோடு பழகிய நண்பர்கள் எங்கோ இருக்கிறார்கள். மறந்தே போய்விட்டேனே?" என்றார்.
அப்போது அந்தப் பக்கமாக நீலநிறப் பட்டுச் சேலை உடுத்திச் சென்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன்.
"அது யார் தெரியுமா?" என்றார் ஆசிரியர்.
"தெரியாதே"
"சந்திரன் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையா? இவள்தான் அவனுடைய மனைவி"
"அறிமுகம் செய்யவில்லை, ஒன்றும் இல்லை. அந்த அன்பான வழக்கங்களை அவன் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை."
"என்ன செய்வது? அவன் போக்கே ஒரு மாதிரி."
"நல்ல பெண்தானே?"
"ஒரு குற்றமும் சொல்ல முடியவில்லை. சந்திரனுடைய அம்மா இருந்திருந்தால் மருமகளைக் கண்ணில் ஒத்திக் கொள்வாள். ஊரெல்லாம் புகழ்ந்து பெருமைப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பெண். ஆனால், அவன் ஒருவன் மட்டும் பழிக்கிறான், சிறுமைப் படுத்துகிறான். அது ஒரு புராணம். உஸ் - அதோ அவன் வருகிறான்."
பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், "இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை" என்று பேசத் தொடங்கினார்.