திருமணம் சடங்குகளோடு நடந்தது. பந்தலுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து நான் கற்பகத்தின் முகத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் ஒரு மூலையில் பழைய கலக்கம் தலையெடுத்தது. உடனே அதை அகற்றி, நண்பன் மகிழட்டும், அதுவே என் கடமை என்று உறுதி பூண்டேன். மாலனுக்கு என் உள்ளத்தில் நிகழ்ந்தது இன்னது என்று தெரியாது. அவன் அடிக்கடி என்னைக் கண்டு புன்முறுவல் பூத்தான். ஆனால், அதற்கு முன் கண்டபோதெல்லாம் மகிழ்ந்த கற்பகத்தின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி இல்லை. அவளுடைய உள்ளத்தில் என்னைப் பற்றிய ஏக்கம் இருக்குமோ என்று ஐயுற்றேன். அப்படித் தெரிந்திருந்தால் திருமணத்துக்கு வராமலே இருந்திருக்கலாமே என்றும் எண்ணினேன். எனக்குப் பழங்கதையாய்ப் போன அந்த விருப்பம் அவளுக்கும் பழங்கதையாய்ப் போயிருக்க வேண்டுமே என்று எண்ணினேன்.
திருமணம் முடிந்து, விருந்தும் முடிந்து அன்று மாலை விடைபெற்றுப் பிரிந்தபோதாவது கற்பகம் பேசுவாளா என்று பார்த்தேன். அவள் இருந்த இடத்திற்கே சென்று அவளெதிரே நின்றேன். அவளுடைய முகத்தில் கண்ட வெறுப்புணர்ச்சி என் தவறுதலை எனக்கு எடுத்துக்காட்டுவதுபோல் இருந்தது. ஒரு வினாடி என் முகத்தைப் பார்த்தாளே தவிர, என்னோடு பேசவும் இல்லை புன்முறுவல் கொள்ளவும் இல்லை. "போய் வரட்டுமா?" என்று நான் சொன்னபோது தலையை மட்டும் அசைத்தாள்.
மாலன் அன்பாக விடை கொடுத்தான். என் உள்ளத்தில் கற்பகம் ஏற்படுத்திய புண் அவனுடைய அன்பாலும் ஆறவில்லை. அதனால் ஆறாப் புண்ணுடன் திருமண வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சாமண்ணா சிறிது தொலைவு நடந்து வந்து வழி விட்டார்.
சந்திரன் இன்னும் சிறிது தொலைவு நடந்து வந்தான். அம்மா அவனைப் பார்த்து, "தங்கையின் திருமணமும் முடிந்தது, அப்பா மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். அவருக்குக் கவலை வைக்காதே, இனிமேல் குடும்பம் உன் பொறுப்பு. நீ நல்லபடி பார்த்துக்கொள்ளணும். உனக்கு நல்ல மனைவியும் வாய்த்திருக்கிறாள். அக்கறையான பெண், அடக்கமான பெண். பார்த்தால் பசிதீரும் என்பார்களே அப்படி இருக்கிறாள். நல்லபடி வைத்துக்கொண்டு சுகமாக வாழணும். அவ்வளவுதான்" என்று அறிவுரையும் வாழ்த்துரையும் கலந்து கூறினார்.