சந்திரனுடைய முகத்தில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. சொன்னால் சொல்லிப் போகட்டும் என்பதுபோல் கேட்டுக் கொண்டு வந்தான். அவனுடைய முகத்தை நேற்றும் இன்றும் கவனித்த நான், என் உள்ளத்தில் உணர்ந்ததைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். "உன் மூக்கில் முன்பு இல்லாத மினுமினுப்பு இருக்கிறது. காதின் ஓரமும் மாசு படிந்தாற்போல் கொஞ்சம் கறுப்பாக இருக்கிறது. தடிப்பாகவும் தெரிகிறது. தோலில் நோய் வந்தால் உடனே கவனிக்க வேண்டும். எதற்கும் ஒரு மருத்துவரிடத்தில் காட்டிக் கேள். அசட்டையாக இருந்து விடாதே" என்றேன்.
அவன் தன் இடக்கையால் காதைத் துடைத்தபடியே "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றான்.
"எதற்கும் ஒருமுறை போய்ப் பார்த்து வருவது நல்லது" என்று சொல்லி விடைபெற்றேன்.
அம்மாவும் நானும் நடக்க, மாசன் எங்களுக்குத் துணையாக ஏரிக்கரை வரைக்கும் வந்தான். வழியில் முன்பு கண்ட குடிசை வந்ததும், அந்தக் கிழக் காதலர் இருவரையும் நினைத்துக் கொண்டேன். "மாசா! அந்தக் கிழவனும் கிழவியும் இன்னும் இங்கே இருக்கிறார்களா?" என்றேன்.
"இருக்கிறார்கள். அப்படியே இருக்கிறார்கள்?" என்றான் மாசன். அம்மா முன்னே போகட்டும் என்று இருந்து, நான் மட்டும் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன்.
"யார் அது?" என்றாள் கிழவி.
"கலியாணத்துக்கு வந்தவன். சந்திரனோடு கூடப் படித்தவன்" என்றேன்.
"முன்னெல்லாம் வருமே, அந்தப் பிள்ளையா?" என்றான் கிழவன்.
"ஆமாம்" என்றேன்.
"மொட்டையம்மா இறந்து போச்சே அப்பா! நல்ல பிறப்பு அது. அது பிறந்த வீட்டில் ஒரு கழுதை வந்து பிறந்திருக்கிறதே."