சாய்த்து, சில இடங்களில் இருந்து,இருந்து, அவர் “அய்யோ வலிக்கி, வலிக்கி” என்று போட்ட அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாது, இழுத்துக்கொண்டே ஓடினாள். கும்மிருட்டான அந்தக் கடலோரச் சாலையில், இருளின் நிழல்போல் பாய்ந்தாள்.
திடீரென்று ஒரு பிளிறல் -ஒரு கர்ஜனை ஒரு அட்டகாசச் சிரிப்பு பிறகு அத்தனையும் சேர்ந்த ஒரு சவால்.
"டபாய்க்கவா பார்க்கிறே? ஒம்மாள... ஒன்ன விடப்போறதா இல்ல. டாய் தாமஸ், மடக்குடா. மொதல்ல அந்த கெயவன பிடிங்கடா. அவள் தானாய் கிடப்பாள். ஏய்... ஆய்... ஊய்..."
சரோசா, திரும்பிப் பார்த்தபோது, அந்த ஆறுபேரும், இன்னும் எங்கேயோ நின்ற இரண்டு பேரும் எட்டாகி, அவர்களை நோக்கி எட்டடி எட்டடியாய் பாய்வதுபோல் ஓடிவந்தார்கள். அவளையும் நாயினாவையும், அந்தச் சாலையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களை விடப்போவதில்லை என்பதுபோல் மூன்று பேர் பக்கவாட்டிலும், எஞ்சியவர்கள் பின்னாலும் ஓடிவந்தார்கள்.
சரோசா, கத்திக் கத்திக் கதறினாள் : "எங்களைக் காப்பாத்துங்கோ... காப்பாத்துங்கோ... கொல்றதுக்கு முன்னாடி காப்பாத்துங்கோ! கும்மாளம்மா... மாரிம்மா... வேளாங்கண்ணி... காப்பாத்துங்கோ!"
அந்தச் சாலையோரமாய் இருந்த குடியிருப்புகளில் சில விளக்குகள் அந்த வீடுகளை எரியவைப்பது போல் எரிந்தன. ஆனால், கதவுகளோ, ஜன்னல்களோ திறக்கப்படவில்லை. பாவம் சில சொரி நாய்கள்தான் அவளுக்கு உதவிக்கு வருவது போல் ஓடிவந்து, பின்னால் துரத்தும் கும்பல்களையும், பக்கவாட்டில் கொலைத்தனமாய் நடந்த பேர்வழிகளையும் பார்த்துக் குலைத்தன. பிறகு அவர்கள் கீழே எதையோ எடுப்பது போல் குனிந்து நிமிர்ந்தபோது, அந்த நாய்கள் வால்களை பின்னங்கால்களுக்கு இடையே செருகிக்கொண்டு ஓடிவந்த வழியிலேயே திரும்பி ஓடின.
சரோசா, தன்னை அறியாமலேயே உயிர் காக்கும் அனிச்சை உணர்வில், நாயினாவை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடினாள். அரைநிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஒன்று புரிந்தது. திரும்பிப் பார்த்தால், அவளை "போ... போ..." என்று நாயினா குரலிடுவது கேட்டது. பிறகு அவர்