Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 30 - சு. சமுத்திரம்
எப்படியோ, சரோசா தாக்குப்பிடித்துவிட்டாள். அந்த அலுவலகத்தில் வேறொரு பிரிவிற்கு மாற்றப்பட்டாள். இதற்கு முன்னதாக பத்து நாட்களுக்குள், அவளுக்காக தனியாகப் பில் போடப்பட்டு, பதினைந்து நாட்களுக்குள் அவளுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு மாற்றாக, அவள் செக்ஷனை 'பிராண்டி' தொல்லை கொடுக்கக்கூடாது என்றும் உடன் பாடாயிற்று.
அந்த சம்பள நாளும் வந்தது... சரோசா, கற்பனைகளை பாதியாக குறைத்துக்கொண்டுதான் அலுவலகம் போனாள். ஆனால் பழைய செக்ஷன் மோகன் வந்து, அவளிடம் ‘ஸ்வீட்' கேட்டான். கேஷியரிடம் அவள் கூலி சம்பளம் சொளையாய் தயாராய் இருப்பதாகவும், அவள், அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, அவனே அவளுக்கு ஒரு லட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்..
சரோசா, ஆனந்த பைரவியாகி, 'பணக்கார' மாடிக்கு, புறப்பட தயாரானபோது -
ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்தார். அரசு அலுவலகங்களுக்கு காவல்துறை கடமையாற்றும் போது எப்படி வர வேண்டுமோ அப்படி வரவில்லை. அதாவது 'மப்டியில்' வரவில்லை. கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட காக்கி யூனிபாரத்திலேயே உள்ளே வந்தார். லத்திக் கம்பு வேறு அங்குமிங்கும் ஆடியது. ஒரு வருட காலமாக கைகளில் கிடைத்தவற்றை அவர் 'கைமாறாமலேயே' வைத்திருந்தார் என்ற ஆத்திரத்தில் ஏதோ ஒரு தலைவருக்கு மழையால் நனைந்து வெயிலால் உலரும் செக்யூரிட்டி கார்டாக நியமிக்கப்பட்டிருந்தார். எவருடைய கையையோ காலையோ பிடித்து இப்போதுதான் 'ஸ்டேஷனுக்கு' வந்திருக்கிறார். ஆகையால் ஒரு வருட வனவாசத்தை அந்த ஒரே நாளில் ஈடுகட்ட விரும்பினார்.
இங்கே சரோசா என்கிறது யாரு என்று அதட்டலாக கேட்டார்.
சரோசாவை, யாரோ ஒருவர் சைகையால் சுட்டிக்காட்ட போலீஸ்காரர், அவள் முன்னால் போய் நின்று அதட்டினார்.
"நீதானே சரோஜா என்கிற கேடி? உன்ன முன்னிப் பின்ன பார்க்காமல் எப்படிக் கண்டு பிடிச்சுட்டேன்னு நினைக்கிறியா? அதுதான் உன் மூஞ்சியிலயே எழுதி இருக்கே?"