உங்களுக்கு டிபன்ஸ் அஸிஸ் டெண்டா இருந்து, இவங்களை நார் நாராகக் கிழிக்கப் போறேன் பாருங்க."
சரோசா அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இளங்கோவை உற்றுப் பார்த்தாள். 'துரைண்ணே' என்று மீண்டும் கத்தப் போனாள். பிறகு எதுவோ நெஞ்சில் கத்த, அதன் உந்தலில் அவள் வாயாடியது.
"அடப்பாவிங்களா! ஒண்ணுமே அறியாத இந்த கொழந்தப் பையன் மேல பழி போடறீங்களே; இந்த அல்பத்துக்காக படாத பாடுபட்டவரு அவரு. போலீஸ் அண்ணாத்தே, வாரியா போகலாம். அடேய் அல்பங்களா, இளங்கோ சாரை விட்டுடுங்கடா."
இளங்கோ,இன்னும் பிரமை கலையாமல் நின்றபோது, சரோசா சித்தப்பிரமை பிடித்தவள் போல் வாசலுக்கு வெளியே வந்தாள்.போலீஸ்காரர்பின்தொடர்ந்தார். இவள் என்னவோ பெண் போலீஸ் போலவும், அவர் என்னமோ யூனிபாரத்தில் தப்பு செய்தவர் போலவும் தோன்றியது. சரோசா, மீண்டும் அந்த அறைக்குள் ஓடிப்போய் இளங்கோவின் இரண்டு கன்னங்களுக்கும் இரண்டு கைகளையும் உறையாகப் போட்டுக் கொண்டு “உன்னால நானு புதுசா பெறப்பெடுத்த சரோசா சாரே! உன்னோட சரோசா கொலைகாரியும் இல்ல, குடிகாரியும் இல்லன்னு நம்பு சாரே. நீ நம்பினா போதும் சாரே. போலீஸ் நம்புறதும் நம்பாததும் அவங்க இஷ்டம். அந்த அண்ணாத்தையோட இஷ்டம்” என்று சொல்லி விட்டு மீண்டும் திரும்பி நடந்தாள்.
அவள் வேகவேகமாக நடந்ததால், போலீஸ்காரர் எக்கி எக்கி ஓடினார். அவள் மூலம் தங்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று நினைத்து ஆங்காங்கே நின்ற கேஷுவல் ஊழியர்கள் அநாதைகள் போல தவித்தார்கள். இனிமேல் நிரந்தர ஊழியர்களிடம் தாங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும், பிராண்டி கிராண்டி கேட்டால் சொந்தக் காசில்கூட வாங்கிக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார்கள்.
அந்தப் போலீஸ்காரரும், இந்த சரோசாவும் அலுவலக வளாகத்திற்கு வெளியே வந்தார்கள். சரோசா, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தாள், ஆண்டவன் இருக்கிறானா என்பது மாதிரி. அவள் மனதில் எந்தப் பயமும் ஏற்பட்டது போல் தோன்றவில்லை. உணர்வுகள் இருந்தால்தானே பயம் என்ற உணர்வு ஏற்படும்? இதற்குள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை போலீஸ்காரர் அதட்டிக் கூப்பிட்டார். அது அவர்கள் முன்னால் வந்து உறுமியபோது, சரோசா போலீஸ்காரர் அதட்டும் முன்னாலேயே ஏறிக் கொண்டாள்.