போலீஸ்காரர், அவள் முடியைப் பிடித்துத் தூக்கப் போனபோது, இளங்கோ அந்தக் கையை லேசாகப் பிடித்தான். இதற்குள் அவர் கை அவள் முடியைப் பற்றியபடி மேலே வந்தது. ஏதோ பேசப் போன இளங்கோவை பேச முடியாதபடி சில அலுவலக வாசிகள் உலுக்கினார்கள்:
“என்ன மிஸ்டர் இளங்கோ! இந்த மாதிரி ஒரு கிரிமினல் கேர்ள எங்க தலையில கட்டிட்ட பாரு. உன்னை நல்லவன்னு நெனத்தா. என்னப்பா... இதெல்லாம்... ஊமை ஊரை கெடுக்கும். பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்பது சரியா இருக்கே..."
போலீஸ்காரரும் இளங்கோவைச் சந்தேகமாகப் பார்த்தார். வார்த்தைகளில் மரியாதை போட்டு அதே சமயம் அவமரியாதைக் குரலில் கேட்டார்:
"உங்களுக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்ன சார் சம்பந்தம்? நீங்களும் அநேகமா ஸ்டேஷனுக்கு வரவேண்டியது இருக்கும்."
இதற்குள் நடப்பதை கேள்விப்பட்டு, பழைய செக்ஷன் ஆட்களும் கூடிவிட்டார்கள்.
அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், இளங்கோவைப் பார்த்துக் கொலை பழிக்கு சாட்சியாய் போகவேண்டியது வருமோ... என்கிற பயத்தில் உண்மையை கொட்டுவதாக நினைத்து உளறிக் கொட்டினார்.
"என்னப்பா இளங்கோ! உன்னோட உல்லாச சல்லாபத்தை யெல்லாம் வெளில வச்சுக்காம எங்களையே புரோக்கர் மாதிரி ஆக்கிட்டியே. கவர்மெண்ட் சர்வண்ட் காண்டக்ட் ரூல்படி உன்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போறோம். நல்லவேளை, போலீஸ்காரர் சரியான சமயத்துக்கு வந்துட்டார். இல்லாட்டி, இவள் எங்களையும் ஒரு வழி பண்ணியிருப்பாள். ஆப்டர் ஆல் ஒரே ஒரு மாதச் சம்பளம் கிடைக்கலேன்னு எப்படிக் குதிச்சா?"
"இளங்கோ! உன்னை விடப்போறதில்ல மேன்...”
பித்துப் பிடித்து நின்ற இளங்கோவின் தோளில், மோகன் கை போட்டாள். "டோண்ட் ஒர்ரி இளங்கோ. என்கொயரி இல்லாம உங்களை எதுவும் செய்ய முடியாது. அதுல நான்