இறைமுடிமணியின் அந்த ஒருமைப்பாடு; கள்ளங்கபடமில்லாத கொள்கைப் பிடிவாதம் எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தாலும் சீமாவையரின் எதிர்ப்பில் சில கலகங்கள் இன்றோ நாளையோ அங்கே விளையக் கூடும் என்றே எதிர்பார்த்தார் அவர்.
"நீ சொல்றது நியாயம்தான் தேசிகாமணி! உன் கொள்கையை, நீ விரும்பற படத்தை, உன்னோட வியாபார ஸ்தலத்திலே நீ வச்சுக்கறது எந்த விதத்திலேயும் தப்பில்லே. சீமாவையர் பண்ற வம்பைப் பத்தி நீ எங்கிட்டச் சொல்ல வந்ததாலே உன் சிநேகிதன்கிற முறையிலே உனக்கு என் யோசனையைச் சொன்னேன். அவ்வளவுதான். உன்னை நான் எதுவும் வற்புறுத்தறதா நீ நினைச்சுக்க வேண்டாம். நீ இஷ்டப்படறபடி உன் கடையை நடத்த உனக்கு உரிமை இருக்கு."
"என்ன நடந்துகிட்டுருக்குங்கிறதை உங்கிட்டச் சொல்லிடணும்னுதான் இதைச் சொன்னேன்" - என்று கூறி அந்த உரையாடலுக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தார் இறைமுடிமணி. அப்போது அவரைப் போலவே கருஞ்சட்டை அணிந்த நண்பர்கள் நாலைந்து பேர் கடைக்கு வரவே அவர்களை வரவேற்றுப் பேசி உபசரித்து அனுப்பிவிட்டு மறுபடியும் இறைமுடிமணி சர்மா நின்றுகொண்டிருந்த புல்தரைக்குத் திரும்பி வந்தார்.
"நீ மட்டும் வந்து தலையைக் காட்டிட்டுப் போயிடாமத் தம்பியையும், இந்தப் பிரெஞ்சுப் பெண்ணையும் உன் கூடக் கூட்டியாந்ததுலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி விசுவேசுவரன்! நானே கண்டிப்பா எல்லாரும் வரணும்னு தான் நேரே வந்து சொல்லிப் போட்டு வந்தேன்." -
சிறிது நேர மௌனத்துக்குப் பின் சீமாவையர் தம்மிடம் நேருக்கு நேர் வந்து கூப்பாடு போட்டு மிரட்டியதைப் பற்றி இறைமுடிமணியிடம் கூறினார் சர்மா.
"அட அவன் கிடக்கிறான் விட்டுத் தள்ளப்பா... அந்த ஆளுக்கு அழிவுகாலம் வந்திரிச்சுன்னுதான் நினைக்கிறேன்..." - என்று வெறுப்போடு பதில் வந்தது இறைமுடிமணியிடமிருந்து.
சர்மா, ரவி, கமலி எல்லாரும் இறைமுடிமணியிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்பட இருக்கையில் தற்செயலாகக் கடையின் பெஞ்சில் ஒரு மூலையில் அடுக்கியிருந்த புத்தகங்களை எடுத்துப் புரட்டினான் ரவி.