ரவியின் வினாவுக்குத் தந்தை பிறகு பதில் சொல்லாவிட்டாலும் அந்த வினாவைப் பற்றி அவர் சிந்திக்கிறார் என்பதே அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதை உடனே அவர் பதில் சொல்லி மறுப்பார் என்று அவன் எதிர்பார்த்தது தான் நடக்கவில்லை.
*****
அவர்கள் மூவரும் வீடு திரும்பியதுமே சீமாவையரின் துஷ்பிரசார வலிமை சர்மாவுக்குத் தெரியும்படியான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. ரவியும், கமலியும், சர்மாவும் வீட்டுப்படியேறி உள்ளே நுழைந்தபோதே திண்ணையில் அக்ரஹாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் சர்மாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சர்மா அப்படியே அவர்களை வரவேற்று முகமன் வார்த்தைகள் கூறி அவர்களோடு திண்ணையில் அமர்ந்து கொண்டார். ரவியும் கமலியும் அவர்களுக்கு ஊடே நடந்து அவர்களைக் கடந்துதான் வீட்டுக்குள்ளேயே செல்ல வேண்டியிருந்தது அப்போது.
வந்திருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த போதே சர்மாவால் அவர்கள் எதற்கு வந்திருக்கக்கூடும் என்பதைச் சுலபமாகவே அனுமானித்துக் கொள்ள முடிந்தது.
பஜனை மடம் பத்மநாப ஐயர், வேத தர்ம சபைக் காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஹரிஹர கனபாடிகள்தான் முதலில் ஆரம்பித்தார்.
"எப்போ அது பொதுச் சொத்துன்னு ஆச்சோ அப்போ நீர் ஸ்ரீ மடத்துக்கு வேண்டியவா நாலு பேரைக் கலந்து பேசி - அக்ரஹாரத்து மனுஷாளே யாராவது கடைகிடை வச்சுப் பராமரிக்கத் தயாரா இருக்காளா, இல்லியான்னு முதல்லே தெரிஞ்சுண்டு அப்புறம் வெளியிலே வாடகைக்கு விட வேண்டாமோ?"
சர்மா பொறுமையாக இதற்குச் சமாதானம் சொன்னார். ஆனால் அப்போது அங்கு வந்திருந்த யாரும் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.