"ஒரு டெண்டர் நோட்டிஸ் ஒட்டி ஏலம் போட்டு இன்னும் அதிக வாடகைக்கு விட்டிருக்கலாம். தெய்வ பக்தியில்லாத மனுஷாளுக்கு விட்டிருக்க வேண்டாம்" என்றார் பஜனை மடம் பத்மநாபன்.
"ஸ்ரீ மடத்திலே எழுதிக் கேட்ட்துக்கு மனுஷா யாராயிருந்தாலும் பரவாயில்லை. வாடகை ஒழுங்காகக் குடுக்கற யோக்கியமான பார்ட்டிக்கு விடலாம்னு பதில் வந்தது. அதான் விட்டேன்." -
"இத்தனை பெரிய ஊர்ல அந்தச் சூனாமானாக்காரன் தான் யோக்கியமானவனா உமக்குக் கிடைக்கணுமோ?"
"ஒருத்தர் யாரு என்கிறதை விட எப்படிப்பட்டவர்ங்கிறது தான் ரொம்ப முக்கியம்."
"அதையேதான் உம்மைத் திருப்பிக் கேக்கறோம்! எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுதான் அவனுக்கு இந்த எடத்தை விட்டீரா?"
விவாதம் வளர்ந்தது. அவர்கள் அனைவரும் சீமாவையரால் தூண்டிவிடப்பட்டுப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது. போகிற போது சர்மாவைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துவிட்டு எழுந்திருந்து போனார்கள் அவர்கள்.
அன்று பிற்பகலில் சர்மா ஏதோ காரியமாகப் பூமிநாதபுரம் புறப்பட்டுப் போயிருந்தார். வசந்தி வந்திருந்தாள். ஒரு வாரத்தில் தான் பம்பாய் போக வேண்டியிருக்கும் என்று அவள் தெரிவிக்கவே கமலி அவளிடம் சில யோசனைகள் கேட்டாள். கமலிக்கு யோசனைகள் கூறியதோடு காமாட்சி மாமி கட்டிக் கொள்கிற மாதிரிப் புடைவை கட்டிக் கொள்வது எப்படி என்று அவளே வற்புறுத்திக் கேட்கவே அதையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தாள் வசந்தி.
அப்போது ரவி எங்கோ வெளியே போயிருந்தான். ஆகவே மனம் விட்டுப் பேசிக்கொள்ள அவர்களுக்கு வசதியாயிருந்தது. சர்மாவின் குடும்பத்தைப் போன்ற மிகவும் வைதீகமான குடும்பங்கள், பழக்க வழக்கங்கள் - நடை முறைகள் பற்றிப் புத்தகங்களில் படித்தும் ரவியிடம் கேட்டும் கமலி நிறைய அறிந்திருந்தும், சில நுணுக்கமான சந்தேகங்கள் அவளுக்கு