இன்னுமிருந்தன. அப்படிப்பட்டவற்றை அவள் வசந்தியிடம் இப்போது கேட்டறிந்தாள். அதில் ஒன்று மிகவும் நாசூக்கானது. வசந்தி அதற்குத் தெளிவாகவே பதில் சொன்னாள். கமலியை முன்னெச்சரிக்கை செய்தும் வைத்தாள்.
"அப்படி நாட்களில் இந்த வீட்டு வழக்கப்படி பின்னால் கொல்லைப்பக்கம் தனி அறை ஒண்ணு இருக்கு. அதிலே போய் இருந்துக்க வேண்டியது தான். நிறையப் புஸ்தகம் எடுத்து வச்சுக்கோ. படி, குளிக்கிற நாள் வர வரை ஒரு ஜெயில் மாதிரி தான்னு வச்சுக்கோயேன்."
தான் காமாட்சியம்மாளுக்குத் திருப்தியாக நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஒவ்வொன்றாய்த் தூண்டித் தூண்டி விசாரித்து அறிந்து கொண்டாள் கமலி. தான் அந்தி விளக்கு ஏற்றியதனால் காமாட்சியம்மாள் செய்த சிறு பூசல், ரவியின் தந்தை தன்னிடம், 'ஒருவருஷத்துக்கு மேல் இந்த வீட்டிலே இருக்க உனக்கு வசதிப்படுமா?' என்று தன்னைக் கேட்டது எல்லாவற்றையும் வசந்தியிடம் மனம் விட்டுச் சொல்லிய பின்பே ஒவ்வொன்றாக யோசனை கேட்டிருந்தாள் கமலி.
ரொம்பச் சிரமமா இருந்தா எங்க வீட்டு மாடிக்குப் போயிடு. நான் அப்பாட்டச் சொல்லிட்டுப் போறேன்" என்று வசந்தி கூறியதற்குக் கமலி ஒப்புக் கொள்ளவில்லை.
"பார்க்கலாம். அதற்கு அவசியம் நேராது வசந்தி!" என்றாள் கமலி. புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பதைத் தவிரப் பூஜை, புனஸ்காரங்கள் பற்றியும் வசந்தியிடம் நிறையக் கேட்டறிந்து கொண்டாள் கமலி.
"நீ கொல்லைப் பக்கத்து அறையில் போய் உட்கார்றப்போ பாருவை வேணும்னா ஸ்கூலுக்கு லீவு போடச் சொல்லி உனக்குத் துணைக்கு வச்சுக்கோ. பல்லாங்குழி, சோழி எல்லாம் ஆடலாம்" என்று சிரித்த படி கூறினாள் வசந்தி.
"துணை எதற்கு? எனக்கென்ன பயமா?" என்று கேட்டாள் கமலி. அவள் விரும்பியபடி அன்று முன்னிரவில் அவளைப் பூமிநாதபுரத்திலிருந்த பெரிய சிவன் கோயிலுக்கு அழைத்துப் போனாள் வசந்தி. கையில் தேங்காய்ப்பழம். பூ ஊதுவத்தி அடங்கிய பூஜைக்கூடையுடன் வெள்ளைக்காரி ஒருத்தி புடவையும் குங்குமத் திலகமுமாகக் கோவிலுக்கு வந்ததைப் பெரிய அதிசயமாகப் பார்த்தார்கள் சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கிராமத்து மக்கள். கோவிலிலிருந்த