“காலடிச் சத்தத்தைப் பார்த்தா ஒங்கப்பா மாதிரி தெரியுது. அவருகிட்ட விஷயத்தைச் சொல்லிடாதே. பாவி மனுஷன், ஏற்கெனவே நொந்து போயிருக்காரு... நான் பேசிக்கிடுவேன். நீ வாய வச்சுக்கிட்டு சும்மா இரு...”
“ஒரு சொல்லுலேயே முடியேம்மா. நடு ராத்திரியில வாறவரு. இன்னைக்கு ஏன் இப்ப வறாரு...”
வெள்ளையம்மா, கதவைத் திறந்தபோது, அவளைப் பார்த்து முறைத்தபடியே பிள்ளையார் வந்தார். அவளும், அவரிடம் பேசினாள்.
“துண்டை எங்கேன்னு கேளேண்டி. நல்ல துண்டு...”
“அடடே... வயலுல குத்துக் கல்லுல போட்ட துண்டை அப்படியே வச்சுட்டேன். இந்நேரம் அது கிணத்துக்குள்ள விழுந்து மிதந்து, அப்புறம் தண்ணிர் குடிச்சு போயிருக்கும். ஏழா. மரகதம், ஏன் இப்படி எல்லாம் செதறிக் கிடக்கு. நகைப் பெட்டிகள ஏன் மேலே வச்சிருக்கே. இவன் ஏன் இப்படி தாறுமாறா நிக்கான்...”
“ஒண்ணுமில்லப்பா...”
“வீடுதான் ஒண்ணுமில்லாம ஆயிட்டே. இவன் ஏதோ வீட்ல சேலையைக் கீலய உடம்புல சுத்திக்கிட்டு என்னெல்லாமோ பண்ணுனானாம். அந்தக் ‘கருவாப்பய’ அருணாசலம் மெனக்கெட்டு வயலுக்கு சைக்கிளில் வந்து என்கிட்ட சொல்லிட்டுப் போறான். அதனாலதான் இப்படி ஓடி வர்றேன்.”
மரகதம், அப்பாவைத் திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, வீட்டின் கிழக்குச் சுவரைப் பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்கிறது. ஓடிப்போய் சாத்தினாள். பிறகு அப்பா பக்கம் திரும்பி, ஏதோ சமாளிக்கப்போனாள். இதற்குள், வெள்ளையம்மா விளக்கம் சொன்னாள்.
“எல்லாம் இந்த ஊருக்கு இடையில வந்துட்டு இடையிலேயே போன சீதாலட்சுமியோட