பூவம்மா மயினி, இரண்டு கைகளிலும், இரண்டு கொத்து வேப்பிலையைப் பிடித்தபடியே லேசாய் ஆடிக்கொண்டு வந்தாள். ஜாக்கெட் இல்லாத உடம்பு அப்போதிருந்த மின்னும் சிவப்பு இப்போது துருப் பிடித்திருந்தது. முட்டிகளிலிருந்து முழங்கைகள் வரைக்கும் பச்சை நீள வாக்கு முகம். ஒரு கண்ணை உள்ளேயும் மறு கண்ணை வெளியேயும் விட்டுப் போன்ற தோரணை... பிள்ளையார் லேசாய் சிரித்தார். வரவேற்று விட்டாராம். வெள்ளையம்மா, மயினியிடம் ஒரு சந்தேகம் கேட்டாள்.
“மயினி... மயினி... ஒன்பது தேங்கா கேப்பீக. ஒரு குலை வாழைப்பழம் வையின்னு சொல்லுவீங்க... ஒரு கட்டு வெத்திலை கேப்பீக. முப்பது ரூபா தட்சிணை தரணும்னு சொல்லுவிங்க... ஒன்னுமே கேக்காம அப்படியே வந்துட்டிகளே...”
“அதுல்லாம் ஊருக்கும். ஒலகுக்கும். இன்னைக்கு நாலு பேரு முன்னால என் தம்பி என்ன அக்கான்னு கூப்பிட்டான். அதுவே போதும் எனக்கு. ஏண்டா தம்பி, நாம் நகமும் சதையுமா இருந்தோமடா. என்னை, அந்தக் ‘கிந்துகாலன்’ இடக்குப் பேசினான்னு அவன ஓட ஓட விரட்டுனியேடா... காலையில தூக்கம் கலைஞ்சதும், எங்க அக்கா கண்ணுலதான் முழிக்கணும்னு ஒன் பெரியப்பா வீட்டிலேயே படுப்பியேடா... பஞ்சபாண்டவர் வனவாசம் படிக்கிறத கேட்டுக்கிட்டே இருப்போமடா. அப்படிப்பட்ட நம்மள விதி பிரிச்சிட்டேடா, அக்காவுக்குக் கொடுத்த ஆயுள் தண்டனை போதுண்டா. அதுக்குக்கூட கழிவு இருக்காண்டா... நீ மட்டும், அக்காள இப்படி விட்டுட்டியேடா... நீ, அக்கான்னு இன்னிக்குச் சொன்னதும் நான், பாவி மொட்ட... எப்படி சந்தோஷப் பட்டேன் தெரியுமா...”
வெள்ளையம்மா, இரு கைகளாலும், முகத்தை வேப்பிலைக் கொத்துக்களோடு மூடினாள். ஏங்கி ஏங்கி அழுதாள். பிள்ளையார், கண்களைத் துடைத்துவிட்டு அக்காவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இதைப் பார்த்துவிட்டு மரகதமும் அழுதுவிட்டாள். வெள்ளையம்மாள் லேசாய்ச் சிரித்தாள்.
பூவம்மாவுக்கு அப்போதுதான் சுயம்புவே நினைவுக்கு வந்தது. வீட்டுக்குள் வந்தாள். சுவரில் சாய்ந்து நின்றவனை உட்கார வைத்தாள். தெற்குப் பக்கமாய் முகத்தைத் திருப்பிவிட்டாள். பிறகு அதட்டும் குரலில் கேட்டாள்.