வேலை. நம்ம பிள்ளைய பேயா ஆட்டுறான்னு சொல்லேண்டி...”
“பூவம்மாவ கூப்பிடுறதுக்கென்ன... நம்ம நிலமை தான் அந்த மொள்ளமாரி வார அளவுக்கு ஆயிட்டே.”
“கூப்பிட்டுக் கூப்பிட்டு வாயே வலிச்சுப் போச்சு. என் தம்பி வந்து கூப்பிடட்டும். வீட்டுக்கு நான் வந்து. ஒம் புருஷன் வீம்புக்கார பிள்ளையாரு. அய்யோ, பேரைச் சொல்லிட்டேனே. எப்படி என் வீட்டுப் படியேறலாம்னு கேட்டால் நான் எந்த முகத்தோட திரும்புவேமுன்னு சொன்னதையே சொல்லுதாள். ஆனாலும் இந்த வீம்பு ஆவாதும்மா... ஊரு ஒலகத்துல செய்யாததையா செய்தாள். ஆசைப்பட்டவன காதலிச்சாள். அவனையே கட்டிக்கிட்டாள். அதுல என்ன தப்பு...”
வெள்ளையம்மா, தானே ஒரு காலத்தில் இந்தப் பிள்ளையாரைக் காதலித்ததில் லயித்து நின்றாள். பிள்ளையாரும், அவள் பேச்சை லேசாய் ரசித்தார். பூவம்மா அவரது சொந்த பெரியப்பா மகள். இவருக்கு மூன்று வயது மூத்தவள். சரியாக நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘வீமசேனன்’ மாதிரி இருந்த லோகல் தர்மரை, காதலித்தாள். கம்மாக்காடும், சோளத் தட்டைகளும், அவர்களுக்கு இடம் கொடுத்தன. தர்மரோட குடும்பத்துக்கு, இந்த இஸ்கு தொஸ்கு தெரிஞ்சபோது, மகனை வீட்டுக்குள் பூட்டினார்கள். ஆனால், இந்தப் பூவம்மா அசரவில்லை. ஆளில்லாத சமயம், அந்த வீட்டுக்குப் போய், கள்ளச்சாவி போட்டு பூட்டைத் திறந்தாள். தருமர் தட்டிக் கேட்கப் போனபோது, அவரை ஒரு அதட்டு அதட்டி, கதவைச் சாத்தித் தாழிட்டாள். பட்டி தொட்டி பதினாறிலும், நடக்காத ஒரு மாபெரும் காதல் புரட்சியால், பிள்ளையார் சொக்காரன்களும், தருமர் சொக்காரன்களும் சொல்லோடும், கல்லோடும் மோதினார்கள். இவர்கள் சண்டை முடியுமுன்பே பூவம்மா, இருதரப்பிற்கும் ஒரு பேரனைப் பெற்றுப் போட்டாள். விஷயம் அதோடு முடிந்தது. ஆனால், பிள்ளையாரைப் பொறுத்த அளவில், அது இன்னும் முடியவில்லை. அக்கா, அக்கா என்று அவள் மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்தார். இப்படி ஓடிப் போகாமல் ‘உட்கார்ந்த’ அவள், அதன்மூலம் தனது வம்சத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டாளே என்று அவருக்குக் கோபம். அது, கூடியதே தவிர குறையவில்லை. சென்ற ஆண்டு பூவம்மா, தனது மகனுக்கு, சொந்த தம்பியின் மகளை தாலி கட்ட வைத்தாள். அதிலிருந்து சொந்த பெரியப்பா மகனான, இந்தப் பிள்ளையார், அந்த பெரியப்பா மகன் கோயக்கண்ணனோடும் பேசமாட்டார்.
பின்னோக்கிச் சென்ற பிள்ளையாரின் மனத்தை வெள்ளையம்மா முன்னோக்கிச் செலுத்தினாள்.