“வாய மூடிக்கிட்டு சும்மா இருடி குஞ்சம்மா... ஏடி சுயம்பு... இந்த பிதாஜி புதுசா நட்டுக்கடை அதான் ஸ்பேர் பார்ட்ஸ் கடை தெறந்தப்போ நீதான கற்பூரம் கொழுத்துனே... இப்போ அந்தக் கடைக்கு என்ன கர்மத்துக்கோ ஒரு ஏஜென்ஸி கிடைச்சிருக்காம். நீ கைராசிக்காரியாம். மெனக்கெட்டு வந்திருக்கார். ஒனக்கு வந்திருக்கிற பவுசப் பாரு... ஒன்ன பெரிய மனுவியாக்குற செலவுக்கு இவளும் நானும் போட்டி போட்டு சம்பாதிக்கோம்... நீ என்னடான்னால், எங்களவிட ரெண்டு மடங்கா சம்பாதிக்கே. பேசாம எங்கள தத்து எடுத்துக்கடி..”
சுயம்பு அந்த நூறு ரூபாய் நோட்டை யாரிடம் கொடுக்கலாமென்று யோசித்தான். தமிழின் இனமானமும், மலையாளத்தின் திராவிட சக்தியும், அவனை இழுக்கடித்தன. பிறகு தேசியவாதியாகி, நீலிமாவிடம் நீட்டினான். அவளோ, அந்த நோட்டை மீண்டும் அவன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். இதற்குள் ஆஷா அங்கே ஓடிவந்தாள். மராத்திக்காரி - துப்பறிவதுதான் அவள் வேலை. அந்த சுயம்புவைப் பார்த்து முதல் குரல் கொடுத்தவளும் இவளே. மராத்தி வாடையில் ‘சுயம்போ, சுயம்பு’ என்றாள். சுயம்பு அவளை சிநேகிதமாய்ப் பார்த்துச் சிரித்தபோது, அவள் லட்சுமியிடம் காது வழியாகச் சொல்ல, அவள், அதை, வாய் வழியாக விட்டாள். காதுக்கும் வாய்க்கும் இடையே ஒரு மொழி மாற்றம்.
“நீ திக்குத் தெரியாமல், அலைஞ்ச மொதல் நாளுலே ஒரு மதராசிப் பொண்ணு அதுதான் - நம்ம தமிழாளு வீட்டுல குழந்தை பிறந்ததுக்கு பாடுனீங்களாமே. அந்தக் குழந்தைக்கு உடம்புக்குச் சரியில்லயாம். பிழைக்கது கஷ்டமாம். இவள் இத மட்டும் சொல்ல வந்தான்னு நெனைக்காதே. இங்கே நின்னு அந்தக் கள்ளப் பயலப் பார்க்க இவளுக்கு வசதியா இருக்குது...”
சுயம்புவின் முகம் கூம்பிப் போனது. இப்போதுதான் தனது முகராசியை நினைத்துப் பெருமைப்பட்டான். ஆனால், முதல் நாளே தான் தொட்ட குழந்தை அதுவும் அண்ணன் மகள் மாதிரியான சின்னக் குழந்தைக்கு இப்படி ஒரு ஆபத்தா? கூடாது. வரக்கூடாது. வரவிடக்கூடாது.
பாடகி நீலிமா பட்டென்று பேசினாள்.
“நாம் ஒரு வீட்டு சந்தோஷத்தை மட்டும் பங்கு போட்டுக்க மட்டும் இல்ல. கஷ்ட நஷ்டத்தையும் பங்கு போடணும். அதனால, சுயம்புவோ, பகுச்சார் தேவியோ அந்தப் பொண்ணு