பிடித்துக் கூட்டிப் போனாள். கீழே காய்ந்து கிடந்த மரத்தைக் காட்டி உட்காரச் சொன்னாள். பிறகு அது அவர்களுக்குச் சரிப்படாது என்பதுபோல் ‘பக்கியடிக்காத’ ஒரு பாறாங்கல்லைக் காட்டினாள். அவர்களோ தரையிலேயே உட்கார்ந்தார்கள். குஞ்சம்மாவிடம் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்த லட்சுமி அங்கே ஓடிவந்து மோவாயை இடித்து இடித்துச் சொன்னாள்.
“நாங்களும் பார்த்தாலும் பாத்தோம்மா... இப்படி ஒரு நிலமைய பார்க்கலம்மா... கடலூர்ல ஈயடிக்கிற பயல்கூட லாட்ஜ்ல ரூம் கிடையாதுன்னு நக்கலாய் சொல்றான். ரூம் இல்லன்னா இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே... அதுக்கு ஏன் நக்கல், இளிப்பு, எளக்காரம்... எங்க டெல்லியாயிருந்தால், பீஸ் பீஸா ‘கவாப்’ செய்திருப்போம். இல்லன்னா ஜோடு பிஞ்சிருக்கும்...”
ஒரு மோகன முகக்காரி சலிப்போடு பதிலளித்தாள்.
“நீங்க வேற. அப்படியே ரூம் கிடைச்சாலும், நடு ராத்திரியில போலீஸ்காரன் வந்து கதவத் தட்டுவான். கஞ்சா எவ்வளவு வச்சிருக்கேன்னு கன்னத்தில அறைவான். மதுரையில நான் பட்டபாடு...”
மேகலை, ஜமாத் தலைவியின் பக்கமாய் நெருங்கிப் போய் உட்கார்ந்து கொண்டாள். எதிரில் யாரோ ஒருத்தன் லுங்கியும் பனியனுமாய், பிட்டத்தைக் குலுக்கிக் கொண்டே அன்னநடை போட்டான். சந்தேகம் கேட்டாள்.
“நம்ம இனம் மாதிரி தெரியுது. ஆனால் நம்மையும் கண்டுக்காமல் சேலயும் கட்டிக்காமலே திரியுது.”
“அது எனக்குத் தெருஞ்சவள்தான். சொந்த வீட்லய இருக்காள்: அங்கங்க சமையல் வேலைக்குப் போயிட்டு அண்ணன் வீட்டுக்கு போயிடும்... குடும்பத்துலயும், யாரும் கட்டுப்படுத்தல. இது மாதிரி படிதாண்டா பத்தினி மாதிரியும் இருக்காளுக. காய்கறி வித்துப் பிழைக்கிறாளுக. இந்தக் கடலூர்ல கூட ஒருத்தன் அஞ்சு நாள் சைக்கிள் விட்டான். அந்த அஞ்சு நாளும் ஆடிப்பாடுறதுக்கு நம்மள மாதிரி ஜீவன்கள் வந்தாளுங்க. ஆனாலும், ஒன்னை மாதிரி என்ன மாதிரி, வீட்ட விட்டு தொரத்தப்பட்டு அலங்கோலமா ஆனவங்கதான் மெஜாரிட்டி. நீ என்ன நினைக்கே...”