Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 38 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 38
காலம் ஒன்பது ஆண்டுகளாக ஓடிப்போய் சுயம்புவை முழுக்க முழுக்க மேகலையாக்கிவிட்டது.
அந்த ஆலமரம் அப்படியேதான் இருந்தது. ஆனால், முர்கேவாலி மாதாவுக்கு அந்த மரத்தடி ஒண்டிக் குடித்தனம் தேவையில்லாமல் போய்விட்டது. தன்னந் தனியாய் தனிக்குடித்தனம் நடத்துகிறாள். அவர்களைப் போலவே, அந்த மரத்திற்கு அருகேயே, கூம்புமாதிரியான பெரிய கோவில். கால் வைக்கக் கூசும்படியான பளிங்குக் கற்கள். ஒரு சுற்று பெரிய தளம். அப்போது புகைப்படமாக இருந்த முர்கேவாலி மாதா, இப்போது, சலவைக்கல் சிலையாக மாறிவிட்டாள். அந்தச் சிலைக்கு முன்னால், கிருஷ்ணன் படம். பின்பக்கச் சுவரில் கங்காதேவியின் சடாமுடிப்படம்.
மேகலை, தேவிக்குக் கற்பூரம் ஏற்றி, கண்மூடித் தியானித்துவிட்டு, பழைய ஆலமரத்தடிக்கே வந்தாள். இப்போது அந்தக் கோவில், அலிகளுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பொதுக் கோவிலாகி விட்டது. இவள்தான், கோவிலை நிர்வகிக்கிறாள்; என்றாலும் ஆட்கள் அதிகமாகும்போது, ஆலமரத்தடிக்கு வந்துவிடுவாள். அதோடு, கோயிலுக்குள்ளே அலிகளின் நல்லது கெட்டதுகளை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. காலையிலும், மாலையிலும் இந்த ஆலமரத்தடியே ஒரு தியானத் திண்ணையாகவும் தீர்வுத் திடலாகவும் மாறிவிட்டது. நீலிமாவுக்கு முன்பல் ஒன்று தானாய் விழுந்து விட்டதால், இப்போது பாடுவதை விட்டுவிட்டு, டோலக்கை மட்டும்தான் அடிக்கிறாள். அவள் உடம்பில் ஒரு தொய்வு. லட்சுமி முகத்தில் தேமல்கள் மாதிரியான வயதுத் தடங்கள். குஞ்சம்மாவுக்கு அதில் சந்தோஷம். அவளுக்கு இன்னும் சுருக்கங்கள் வரவில்லை. ஆனாலும், உடம்பு முழுவதும் கொஞ்சம் சுருங்கிப்போய்தான் இருந்தது. மேகலைக்குத்தான் பிராய வயதின் மறுபுற எல்லை.
அந்தத் தோழிக் காய்கள் லோசாய்ப் பழுக்கப்போன போது, அந்த மேகலைப் பிஞ்சு இப்போது நல்ல காயாகி விட்டது. கடிக்கும்போதே இனிப்பது மாதிரியான ஒருவித துவர்ப்புக் கலந்த இனிப்பைத் தருமே கொய்யாக்காய் அது மாதிரி முகம். சிறிது லேசாய் கரடு முரடு, பழைய குழைவு இப்போது கம்பீரமாய்த் தெரிந்தது. பழைய சொங்கிப் பார்வை, இப்போது சொக்கும் பார்வையானது.