மேகலைக்குப் பின்பக்கம், நீலிமாவும், நலிமாவும் நின்று கொண்டிருந்தார்கள். மார்க்கரெட் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். லட்சுமியும், குஞ்சம்மாவும் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். பேர் என்னமோ தனித்தனி வீடுகள்... ஆனால், இவர்கள் பெரும்பாலும் ‘கிச்சன் காபினெட்’ மாதிரி, மேகலை வீட்டில்தான் இருப்பார்கள்.
மேகலை, தன்னைப் பார்ப்பதற்காக அங்குமிங்குமாய் கூடிக்கூடிப் பேசியபடியே நின்றவர்களைப் பார்த்தாள். தாயும் மகளுமாய் தனித்திருந்தவர்கள் கண்ணில் பட்டார்கள்.
“எக்கா! ஏன் அங்கேயே நிற்கீங்க... வாங்கக்கா...”
ஒரு காலத்தில் இறுக்கிக் கட்டிய கயிறுபோல் தோன்றிய சுலோச்சனா, இப்போது தொப்பையாய் சரிந்து நின்றாள். அவள் வயிறு பெருமளவில் முன்னுக்கும் முதுகு சிறுமளவில் பின்னுக்குமாய் தடம் விலகி நின்றன. ஆனாலும் அவள் முகத்தில் குறுஞ் சிரிப்பு. வழக்கம்போல் கண்களைத் தாழ்த்தி தாழ்த்திப் பார்க்கும் மாதக் கடைசிப் பார்வையல்ல. மகளின் தோளில் கைபோட்டு மந்தகாசமாய்ச் சிரிக்கும் அழகுப் பார்வை. மேகலை அந்தச் சிறுவனையே உற்றுப் பார்த்தாள். அறிவு ஜீவிகள் போடும் குர்தா - ஜிப்பா ஜோரான நிறம்.
“என் மருமகன் ரொம்பத்தான் வளர்ந்துவிட்டான்.”
“என்ன ஆண்டி? லாஸ்ட் வீக் பாத்தீங்க... அதுக்குள்ளயா வளர்ந்துடப் போறேன்!”
“பொண்ணு வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒண்ணுடா. இப்போ ஆம்புள வளர்த்தியும்... அப்படியா ஆகிட்டு.”
“மம்மி! வாட் ஆண்டி சேய்ஸ்”
“இப்படித்தான் ஏதாவது புரியாட்டா இங்கிலீஷ் காரனா மாறிடுவான் சுயம்பு.”
“இவனைப் பார்க்கும்போதெல்லாம், நான் ஒன் வீட்டுக்கு ரெண்டாவது தடவையா வந்தததும்,