“பிதாஜி... பிதாஜி”
அந்த சர்தார்ஜி காலில் கைபோட்டவளைத் தூக்கி நிறுத்தி, ஆரத் தழுவினார்.
“கானா காதியா பிதாஜி...”
“நை பேட்டி. இப்பதான் சாப்பிட்டேன். என் வீட்டுக்கு நீ வந்து ஆறு மாசம் ஆகுது. வேலை தினமும் இருக்கும் மகளே. நாம்தான் அதிலிருந்து ஒரு நாளைக்காவது விலகணும்...”
“எங்க பிதாஜி முடியுது? வெட்ட வெளியாய் இருக்கிற இந்த இடத்துல அலிகளுக்காக ஒரு தர்மஸ்தலா கட்டணும் என்கிறது எங்க அம்மாவோட ஆக்ஞை. அதுக்கு பிளான் போடறதிலயும், போட்ட பிளானைத் திருத்துறதுலயும் இருக்கேன். கட்டிடம் ஒரு கலை என்கிறதை மறந்துட்டு, அந்தக் கலைக்கே சிறைவைக்கிற மாதிரி ஒருத்தன் பிளான் கொண்டு வாறான்...”
“இந்த சர்தார்ஜிகூட பழையபடியும் ஒன்கிட்ட அடைக்கலமா வரலாம். சர்தார்ஜி துரத்துகிற பஞ்சாபி இந்துக்களும், இங்க வரலாம். அதனால பெரிசா கட்டு. என் நன்கொடை எப்போ வேணும்?”
“கடைக்கால் போட்டபிறகு வாங்கிக்கிறேன்... செமத்தியா கேட்பேன்.”
“ஒனக்கு இல்லாத பணமா? அப்புறம் மகளே, கோபப்படாமல் கேக்கணும். ஒனக்கு பரிதாபத்ல ஒரு சின்ன பாக்டரியை எழுதி வைக்கேன்னு சொன்னேன். தட்டிட்டே. ஆனால், இதைத் தட்ட விடமாட்டேன். இந்திரபுரியில் உன்பேர்ல ஒரு வீட்டை எழுதி வைச்சுட்டேன். மாதம் வெறும் பத்தாயிரம் ரூபாதான் வாடகை வரும். அதோட ரெண்டு லட்சத்தை உன்பேர்ல டிபாசிட் போட்டுட்டேன்.”
“இதுக்குத்தான் என் பாங்க் அக்கவுண்ட் நம்பரைக் கேட்டிங்களா... எனக்கு எதுக்கு பிதாஜி...”
“நீ எனக்கு செய்திருக்கிறதை, நான் பழையபடியும் சொல்லிக்காட்ட விரும்பல. ஆனால், நான்