மேகலைக்கு உணர்வு வந்தது. அதட்டினாள்.
“ஏண்டி அம்மா அடித்தா நீயும் திருப்பி அடிக்கணுமா...”
“அம்மா கூட பாட்டுப்பாட வாறேனேன். பஞ்சாபி பயலுவ விசிலடிக்கான். வீட்டுக்குள்ளய இரு என்கிறான். வீட்டுக்குள்ள இருக்கவா நாம பிறந்திருக்கோம்...”
“பேசாமல் ரெண்டு பேரும் ஒரு சடங்கு வச்சு சுவிகாரத்தை ரத்து செய்யுறீங்களா!”
கிழவி, மேகலை கண்டிப்பதைப் பார்த்துவிட்டு, ‘சரி’ என்றாள். உடனே சின்னவள் அழுதாள். ‘மாட்டேன், மாட்டேன்’ என்று தலையை ஆட்டினாள். அம்மாவை அங்கேயே அடிக்கப் போனாள். பிறகு குரு அலியான மேகலையைப் பார்த்து, நாக்கைக் கடித்தாள். மேகலை தீர்ப்பளித்தாள்.
“அம்மா அடிக்கலாம், மகள் அடிக்கப்படாது என்கிற அலிகள் சம்பிரதாயத்தை பிடிச்சுக்கிட்டு இருக்கக் கூடாது. எல்லாம் ஒரு சொல்லுல அடங்கணும். கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுன்னா, குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா பெரியம்மா... ஏண்டி, இனிமேல் அம்மாவ அடிக்கிற வேலைய வச்சுக்கிட்டால், அப்புறம் நடக்கற சங்கதி வேற...”
அவர்கள் போனதும் லுங்கியும் முண்டாசுப் பனியனுமாய் ஒருவன். பக்கத்தில் ஒரு புடவை அலி.
“இவளுக்கு அடுத்த வாரம் சித்ரா பெளர்ணமியில் நிர்வாணம் வச்சிருக்கேன். முர்கே மாதாவோட ஆசீர்வாதமும் உங்களோட சிறு தொகையும்...”
“கருப்புக் கயிற கட்டி வெட்டிப் போடுற காட்டு மிராண்டித்தனம் இனிமேல் வேண்டாம். நமக்குன்னு ஒரு டாக்டர் தேவ்நகர்ல இருக்கார். இதுக்குன்னே நர்ஸிங் ஹோம் வச்சிருக்கார். அவரே ஆபரேஷன் செய்வார். லட்சுமிக்கா, இவளுக்குக் கொஞ்சம் பணம் கொடு...”
“ஆபரேஷன் சமயத்துல கொடுக்கலாம். இப்ப கொடுத்தால், விஸ்கி விஸ்கியா வயித்துக்குள்ள போயிடும். ஏண்டி முறைக்கே... பணத்தை, டாக்டர்கிட்டத்தான் கட்டுவேன். கொஞ்சம்