அங்கே ‘நின்றது’ அதட்டலோடு கேட்டது.
“பெத்துப்போட்ட அம்மாவே என்னை அடிக்கலை, இவள் எப்படி அடிக்கலாம்!”
மேகலை கண்ணை மூடி, சுயம்புவாக மாறினான்.
அம்மாவை அவன் திட்டியிருக்கிறான். ஆனால் ஒரு நாள்கூட, இவனை அவள் கடிந்ததில்லை. அடிக்கப்போன கையையே செல்லமாகப் பிடித்து சொடக்கு விட்டிருக்கிறாள். ‘அம்மா. நீ இப்ப எப்படி இருக்கியோ! இருக்கியா... செத்தியோ...’ சுயம்புவுக்கு அம்மாவின் நினைப்புக்கு ஊடகமாக அக்காளின் நினைப்பு நெஞ்சை அரித்தது.‘அண்ணன் எனக்கு சூடு மட்டுமா போட்டான், கழுத்தைக் கட்டி அழுதவனும் அவன்தானே. பல்கலைக் கழக பதிவாளர் முன்னால், அப்பா எப்படிக் கெஞ்சினார். ஒரு லட்டர் போடலாமா? ரூபாயே திரும்பி வந்துதே... நானும் பிள்ளையாருக்கு பிறந்துட்டு சுயமரியாதை இல்லாம இருக்க முடியுமா? மனசே மரத்துப்போச்சு!’
சுயம்பு, அந்த ஆலமரத்தடியில் முர்கேமாதாவிற்கு இணையாக இருந்த கங்காதேவி படத்தையே பார்த்தான். எனக்காக எழுந்து எனக்காகவே வாழ்ந்தவள். அந்தக் காலத்தில் நல்லாம்பட்டியில் வில்லுப்பாட்டாளி, சிங்கி போடும் தன் மகனைப் ‘பாட்டாளி’ யாக்கிவிட்டு அவனுக்குப் பின்பாட்டுப் பாடுவாரே. அப்படி என்னை முன்னிருத்தி தன்னைப் பின்னிருத்தியவள். இவள் சொல்லிக் கொடுத்த வரலாறும், அள்ளிக் கொடுத்த உபதேசங்களும், படிக்கக் கொடுத்த புத்தகங்களும் நினைத்துப் பார்க்கவே நேரம் தேவைப்படும் அளவிற்கு நீளும். அம்மா பெற்றுப் போட்டாள். பச்சையம்மா எடுத்துப் போட்டாள். ஆனால் இந்த கங்காதேவி அம்மாவோ, என்னை எனக்கு அடையாளம் காட்டி, நானே அவளென்று ஆக்கிக் காட்டியவள். அறுபது வயது பெரிய வயதல்ல. இருந்தாலும் உயிர் படுத்த படுக்கையில் தூங்கும் போதே போய்விட்டது. ஆனால், அந்த அதிர்ச்சி, இன்னும் போனபாடில்லை.
சுயம்பு, மீண்டும் மேகலையாகி கங்காதேவி படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள். கடந்த ஓராண்டு காலத்தில் இவன் இப்படி அடிக்கடி கும்பிடுவதால் அவள் தோழிகளுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் அங்கே நின்ற தாய் அலிக்கு நேரமாவது போலிருந்தது. எங்கேயோ புறப்படப்போன மகளை இழுத்துப் போட்டுக் கொண்டே இருமினாள்.