சாப்பிட்டுட்டு உட்காரேண்டி..”
மேகலை, எழுந்திருக்கப் போனாள். அதற்குள் நாலு பேர் காரில் இறங்கினார்கள். தலை தாழ்த்திக் கும்பிட்டார்கள். மேகலை அவர்களையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் போனாள். டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்கள். லட்சுமி சப்பாத்திகளை வைத்தாள். மார்க்ரெட் சப்ஜியை வைத்தாள். குஞ்சம்மா, நீலிமாவும் சமையலறைக்குள் உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
மேகலை, சாப்பிட்டபடியும், அவர்களை சாப்பிட வைத்தபடியும் பேசினாள்.
“ஒங்க வழக்கப்படி ஒங்க பிரிவு அலிகள் யாராவது செத்தபிறகு அவள தலைகீழா போட்டு வைச்சு, பிணத்தை செருப்பு வைச்சு அடிச்சுக்கிட்டே சுடுகாட்டுக்குப் போறது இந்தக் காலத்துக்குப் பொருந்துமான்னு யோசிச்சுப் பாருங்க. நோக்கம் புரியுது. இனிமேல் அடுத்த பிறவியிலாவது செத்துப்போனது அலியாப் பிறந்து சீரழியக் கூடாது என்கிற உங்க ஆவேசத்தைக் காட்டுது... ஆனால், நாமும் மனித சீவராசிகள்தான்... நம்மாலயும் சொந்தக் கால்ல நிக்க முடியும்.”
“எப்படி பழைய சம்பிரதாயத்தை...”
“ஏசு கிறிஸ்துவ சிலுவையில் அறைஞ்ச கோலத்த காட்டுறதையே, இப்போ அப்படி காட்டப்படாதுன்னு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே ஒரு கருத்து நிலவுது. எதையும், சோகத்துல முடிக்காமல், ஏசுநாதர் சிலுவையில் இருந்து பீறிட்டு உயிர்த்தெழுந்ததாய் காட்டணும்னு மேல் நாடுகளில் இளம் பாதிரிமார்கள் வாதாடி வாறாங்க. எதுக்கும் யோசிச்சுப் பாருங்க... எங்கம்மா கங்காதேவி இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாங்க.”
மேகலையிடம், வாதிடப்போன அந்தக் கிழட்டு அலிகள், அவள் கை கழுவுவது போல் கண்களும் தங்களைக் கழுவிக் கொள்வதைப் பார்த்து விட்டார்கள். யோசிக்க வேண்டிய விவகாரம். செருப்படி பட வேண்டியது, அலிகளை நையாண்டி செய்கிறவர்கள்தான்.
அந்த மூவரையும் வழியனுப்ப மேகலை வாசலுக்கு வந்தபோது, ஒரு படகுக் கார் வந்தது. மேகலை புரிந்து கொண்டாள்.