Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 03- சாவி
பெரும் பாவ காரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள,
"ஸ்மிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸுஸ்வாஹா!"
"அக்கினி பகவானே! தினம் தினம் நான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித்தவனாக ஆகும்படி அருள்வாயாக" என்ற மந்திரத்தை மனதுக்குள்ளாகவே சொல்லி வேண்டிக் கொண்டான்.
"ஏண்டா, உன் உடம்பெல்லாம் இப்படி ஜூரம் வந்த மாதிரி நடுங்கறது? கண்ணெல்லாம் சிவந்திருக்கே தலை வலிக்கிறதா? சூடா காப்பி போட்டுக்கொண்டு வரட்டுமா? இப்பத்தான் பசும்பால் கறந்து வந்திருக்குடா! குடிச்சுட்டு நாடாக் கட்டிலை இழுத்துப் போட்டுண்டு ஒரு "ஆவர்த்தம்" தூக்கம் போடு. சரியாப் போயிடும், காலையிலே ரெண்டு தரம் பச்சைத் தண்ணில ஸ்நானம் பண்ணயோல்லியோ, அதான் இப்படி" என்றாள் பாகீரதி.
"இல்லை; நான் காப்பி சாப்பிடற வழக்கமில்லேன்னு உனக்கே தெரியுமே. தெருக் கோடி அரசமரம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சமித்தெல்லாம் தீர்ந்து போச்சு. இப்படி கொஞ்ச தூரம் காத்தாட நடந்துட்டு வந்தாலே எல்லாம் சரியாப் போயிடும்" என்று வெளியே கிளம்ப அவசரப்பட்டான்.
"எதுக்கு இப்படித் துடிக்கிறே? இங்கே இருக்கப் பிடிக்கலையா? என்னோடு பேசப் பிடிக்கலையா? உனக்கு இஷ்டமில்லேன்னா நீ பல்லாங்குழி ஆட வேணாம். தோட்டப் பக்கம் வாயேன். வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து சந்தோஷமாப் பேசிண்டிருக்கலாம்."
"இல்லை பாகீ ! நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாவம்! உனக்குத்தான் நாளெல்லாம் வேலை. நான் போயிட்டு இதோ வந்துடுறேன்" என்று புறப்பட்டு விட்டான்.
போகிற வழியில்தான் சரபோஜி சத்திரம் இருந்தது.