Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 04 - சாவி
துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி "நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்" என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.
”ஏண்டா, என்னை நேராப் பார்த்துபேசக் ---- மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?"
"என்னவோ?."
"ஏதாவது சாப்பிட்டுட்டு போ."
"ஹ்ம். இந்தத் தீட்டோடயா?."
"தீட்டா!.. இதுக்கு பேர் தீட்டா? ஒரு தடவை ஸ்நானம் பண்ணினாப் போறது. நான் குளிச்சட்டேன்."
"ஸ்நானம் பண்ணிக் கழுவிவிடுகிற பாபமா இது? மகாபாபம் ஆயுசு பூராவும் குளிச்சாலும் தீராத பாபம்! சித்திர குப்தன் கணக்கிலே ஏறிவிட்ட பாபம்! இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. குருத் துரோகம், விரதபங்கம். இன்னும் என்னென்னவோ?. சொல்லவே நாக் கூசறது."
“ஏண்டா மனசைப் போட்டு அலட்டிக்கிறே? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"
"பலியானது நான்தானே! துக்கம் எனக்குத்தானே!"
"நீ ஆண்பிள்ளை. நானே கவலைப்படாதபோது இதில் உனக்கென்ன துக்கம்?"
"பரம வைதிகமான குடும்பத்தில் பிறந்தவள் நீ! தர்க்க சாஸ்திரம் படிச்சவர் உங்கப்பா, இரண்டு யாகம் பண்ணவர். டபிள் சிரோமணி! ஊருக்கு உபதேசம் பண்றவர். அந்த உத்தமருக்குப் பெண்ணாய்ப் பிறந்த நீ இப்படி கடந்துக்கலாமா? இந்த ரகசியம் கனபாடிகளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டுண்டு பிராணனை விட்டுடுவார். அதை நினைக்கவே பயமாயிருக்கு. உடம்பெல்லாம் நடுங்கறது!"