"அனுப்பாம இருப்பனா? குண்டு பட்டாபி போய்ப் பார்த்தானாம். அங்கே வரவேயில்லைன்னு அர்ச்சகர் சொல்லிட்டாராம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கமலா!... "
"வந்துருவான். கவலைப்படாதே. பசங்க சாப்டாச்சா?"
"சமையலே இனிமேத்தான் ஆரம்பிக்கணும். காலம்பற பழையது சாப்பிட்டா."
கமலா வீடு முழுதும் ஒரு முறை சுற்றி வந்து கண்ணோட்ட மிட்டாள். தோட்டப்பக்கம் போய் பசுமாடுகளைத் தடவிக் கொடுத்துவிட்டு வந்தாள். முற்றத்தில் மஞ்சள் மஞ்சளாய் வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடந்தன.
"ஏண்டி இதெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தக் கூடாதோ? முனியம்மா வரலையா?" என்று கேட்டுக்கொண்டே தாழ்வாரத்தில் - ராத்திரி மூர்த்தி படுத்திருந்த இடத்துக்கு வந்தாள். சுவர் ஓரமாக அவன் படுத்திருந்த பாயும் தலையணையும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.
படுக்கைக்கு அருகில் வாடி வதங்கிய மல்லிகைப்பூக்கள் பழுப்பு நிறத்தில் சிதறிக் கிடந்தன.
"பூவெல்லாம் இங்கே ஏன் விழுந்து கிடக்கிறது?" என்று கேட்டாள் கமலா,
"கூடத்துலே லட்சுமி படத்துக்கு வச்சிருக்தேன். இந்தக் குருவிகள் அடிக்கிற லூட்டி சகிக்கலே, அதுகள் கொண்டு வந்து போட்டதோ என்னவோ?" விடு பூரா குப்பை பண்ணிண்டு…." என்று சமாளித்தாள் பாகீரதி.
"இன்னும் நீ குளிக்கலையா?"
"காலம்பறவே குளிச்சுட்டேன்.
”பின்னே ஏன் இப்படி அழுது வடிஞ்சுண்டு இருக்கே? தலையை விரிச்சுப் போட்டுண்டு முதல்லே இப்படி வந்து உட்கார். தலைவாரிப் பின்னிடறேன். சீப்பைக் கொண்டா" என்றாள் கமலா,