"அசட்டுப்பிசட்டுன்னு பேசாதே! யாரிடமாவது போய் உளறி வச்சுடாதே! இந்த ரகசியம் நம்ம ரெண்டு பேரோடு செத்துப் போகட்டும். சத்தியம் பண்ணிக்கொடு."
"சத்தியமும் வேணாம்; ஒண்ணும் வேணாம்." விரக்தியோடு புறப்பட்டான் மூர்த்தி.
"சீக்கிரம் வந்துடு மூர்த்தி!" எதுக்கு இவ்வளவு பெரிய பையைத் தூக்கிண்டு போறே?"
"எல்லாம் துவைக்க வேண்டிய பாவ மூட்டை"
"ஜாக்கிரதை வழுக்கி விழுந்துடப் போறே!"
"அதான் ஏற்கனவே வழுக்கி விழுந்தாச்சே!"
"மூர்த்தி நீ குத்தலாப் பேசறே! ரெட்டை அர்த்தம் வெச்சுப் பேசறே! என்னை உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு. நான் இந்த நிமிஷமே தீயிலே விழுந்து செத்துப்போறேன். எனக்கு நீ தான் சகலமும். என் கழுத்திலே யார் தாலி கட்டினா? எப்ப அதை எடுத்தான்னு எனக்கு எதுவுமே தெரியாதுடா! பிராம்மண குலத்தில் பிறந்தது தப்பா? அதுக்கு இப்படி ஒரு தண்டனையா? நீயே என்னை வெறுத்தால் அப்புறம் சாவைத் தவிர எனக்கு வேற வழியில்லே."
“நீ ஏற்கனவே கல்யாணம் ஆன பெண். கணவனை இழந்தவள். என்னைவிட வயதில் பெரியவள். நம் உறவு பொருந்தாத உறவு. வயசாலும் பொருந்தாது. சாஸ்திரத்துக்கும் பொருந்தாது. என்னை மறந்துடு பாகீ! இந்தத் தகாத உறவு வேணவே வேணாம்!"
"அப்பாவிடம் சொல்லிடமாட்டயே. எனக்கு பயமா யிருக்குடா! சொல்லமாட்டேன்னு நீ சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் நான் நிம்மதியாயிருப்பேன்." துக்கம் தொண்டைக் குழியில் சிக்கி, வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன. அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள்.
"அழாதே பாகீ! பசங்கள் யாராவது பார்க்கப் போறா! உள்ளே போய் சமையல் வேலையை கவனி. நேரமாச்சு." படி இறங்கினான்.