Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 05 - சாவி
கமலாவும் பாகீரதியும் கண்விழித்துப் பரமபதம் விளையாடி, சிறுபிராய நினைவுகளை அசைபோட்டு, தங்களோடு கண்ணாமூச்சி விளையாடிய சமகாலப் பெண்களின் வாழ்க்கையை அலசி, சமையல்கார அம்மாள் திடுதிப்பென்று கல்கத்தா பேரனிடம் போய் விட்டதை எண்ணிப் பார்த்து, அம்மாவின் அன்பையும் பாசத்தையும் நினைத்து நெகிழ்ந்து, (அடி சனியன்களா, தலை பின்னிக்க வாங்கடி!) எல்லாம் பேசித் தீர்த்தபோது தோட்டத்தில் காகங்கள் கரையவும் பொழுதுவிடிய இன்னும் சிறிது நேரமே உள்ளது என்பதை உணர்ந்தார்கள்!
"வேடிக்கைதான்! பொழுது விடிந்தது கூடத் தெரியாம இத்தனை நேரமா பேசியிருக்கோம்?" என்று இருவருமே சிரித்துக் கொண்டார்கள்.
தோட்டப்பக்கத் தெருவில் பஜனை கும்பல் ஒன்று அபஸ்வரமாய்ப் பாடிக்கொண்டு போயிற்று.
வாசலில், முனியம்மா தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். லேசாக பேச்சுக்குரல் கேட்க, பாகீரதி எட்டிப் பார்த்தாள். விடியற்கால இருட்டில் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவளுடைய எண்ணமெல்லாம் மூர்த்தியைப் பற்றியதாகவே இருந்ததால்,-éஒரு வேளை முர்த்திதான் வந்திருப்பானோ?’ என்ற ஆவலில் இருட்டில் உற்றுத் தேடினாள்.
நொண்டி கிட்டா தெரிந்தான்.
"இந்த நேரத்தில் இவன் எப்படி வந்து முளைத்தான்?" என்று வியந்தபடியே வாசலை கோக்கி விரைந்த பாகீரதி, "வாடா, தீபாவளிக்குப் போனவன் இப்பத்தான் வறயா? எங்கிருந்து வறே?"
"தஞ்சாவூர்லேந்து. நடுவழியில் பஸ் மக்கர். அதான்."
"பின் கட்டுக்கு வா, நிறையப் பேசணும்."
“கனபாடிகள் வந்தாச்சா?" ஒரு மரியாதையோடு ரகசியக் குரலில் கேட்டான் கிட்டா.