Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 06 - சாவி
அத்தனை பேரும் ஒன்றும் புரியாதவர்களாய் செயலிழந்து நிற்க, நொண்டி கிட்டா மட்டும் வேகமாக இயங்கினான். துளசி தீர்த்தத்தை எடுத்து வந்து ‘வழி விடுங்க, தள்ளி நில்லுங்க!’ என்று உக்கிராண அறையில் சூழ்ந்து நின்றவர்களை அதட்டிக் கொண்டே பாகீரதியின் முகத்தில் தெளித்ததும், பாகீரதி கண் திறந்து பார்த்தாள்.
"காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலையோன்னோ அதான்! மணி பத்தாகப் போறதே! கழுத்துப்படி விட்டுப் போக அவரைக்காய் பறிச்சிண்டு நின்னா, காலை வெய்யில் பித்தம் தலைக்கேறாம என்ன பண்ணும்? இந்தா, இந்த மோரைக்குடி, முதல்ல" என்று தம்ளரை நீட்டினாள் கமலா.
அது வெய்யில் தலைசுத்தலா, அல்லது அப்பா வந்து விட்டாரே, அந்த ரகசியம் அம்பலமாகி விடுமோ என்ற அச்சத்தின் விளைவா என்பது பாகீரதி மட்டுமே அறிந்த ரகசியம்.
வாசலில் உட்கார்ந்திருந்த கனபாடிகளுக்கு இந்தச் செய்தி எட்டி, அவர் உள்ளே வருவதற்குள் பாகீரதியே எழுந்து போய் "அப்பா, வாங்க!" என்று கனிவோடு வரவேற்றாள்.
"என்னம்மா, உனக்கு?"
"ஒண்ணுமில்லப்பா, பசி மயக்கம்" என்றாள்.
போர்த்தியிருந்த காஷ்மீர் சால்வையை கனபாடிகள் தம் உடம்பிலிருந்து அகற்றும்போதே கிட்டா ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான்,
"அவன் எங்கடா, மூர்த்தி?" என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் கனபாடிகள்.
"ஸ்நானத்துக்குப் போறதாச் சொல்லிட்டுப் போனான்."
"அடடே வாசல்ல பையை வச்சுட்டு வந்துட்டேன். போ, போ! எடுத்துண்டு வா, ஒடு" என்றார். அதில் மூர்த்திக்காக நாலு முழம் பட்டுவேட்டி ஒன்று வாங்கி வைத்திருந்தார்.