குத்து விளக்கும், வெண்கல மணியும் பஞ்சபாத்திரங்களும் தீக்கொழுந்துபோல் பளபளக்க, அர்ச்சனைக்குரிய புஷ்பங்கள் மூங்கில் தட்டில் குவிந்திருக்க, அந்த இடத்தில் ஒரு தெய்வீக மணம் சூழ்ந்திருந்தது.
திராட்சைப் பழங்களை நைவேத்தியமாகக் கொண்டு வைத்தாள் கமலா.
*ஏது திராட்சை!” என்று கனபாடிகள் கேட்க ’ஊர்லேர்ந்து கிட்டா கொண்டு வந்தான்’.
பூஜை முடித்து, ’ஆயதனவான்பவதி’ சொல்லி, தோட்டத்தில் காக்கைகளுக்கு அன்னமிட்டபின் சாவகாசமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார் கனபாடிகள்.
“மூர்த்தி எங்கடா போனான்? ஸ்நானத்துக்குப் போனவனா இன்னும் வரலை?"
"அவன் வரமாட்டான்" என்றாள் கமலா.
“ஏன்?”
"இனிமே வேதம் படிக்கப் போறதில்லையாம். திரும்பி வரப் போறதும் இல்லையாம்! யாரிட்டயும் சொல்லிக்காமலே போயிருக்கான்."
"திடீர்னு வேதத்தின் பேர்ல அப்படி என்ன கோபம்? இதெல்லாம் யாரிடம் சொன்னான்?"
"கிட்டா, மூர்த்தியை தஞ்சாவூர்ல பார்த்தானாம்."
"கிட்டாவை இங்க கூப்பிடு."
"அப்பா, கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வரேளா? உங்ககிட்ட தனியாப் பேசணும்" என்று கனபாடிகளை ரகசியக் குரலில் அழைத்தாள் கமலா.