பாடசாலைப் பையன்கள் ஒவ்வொருவராக வந்து கனபாடிகளுக்கு பக்தியோடு நமஸ்காரம் செய்தனர்.
நாலைந்து பையன்கள் மட்டும் ஒரு முலையில் உட்கார்ந்து ஸுஸ்வரமாக சாமவேதம் இசைத்துக் கொண்டிருந்தார்கள். கனபாடிகளுக்கு நமஸ்காரம் செய்ய, அவர்கள் எழுந்து வர முயன்றபோது,
“வேணாம்; பாதி ஆவிருத்தியில் விட்டுட்டு நமஸ்காரம் பண்ண வர வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே தோட்டப் பக்கம் போனார் கனபாடிகள்.
"மூர்த்தி ஸ்நானத்துக்குப் போயிருக்கான்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டயே உண்மை தெரிஞ்சா." என்று கேட்டாள் கமலா.
"நான் பொய் சொல்லலையே! அவன் ஆத்துக்குப் போறேன்னுதானே சொல்லிட்டுப் போனான். அது உண்மை தானே..?"
"அப்பாவுக்குத் தெரிஞ்சதுன்னா என்ன ஆகுமோ!" என்றாள் பாகீரதி.
"நீ எதுக்கு அனாவசியமா பயப்படறே? நீயா அவனைப் போகச் சொன்னே?"
”உண்மையை மறைச்சுப் பேசறதுகூடப் பொய்தானேடா!”
"ஆபத்துக்குப் பொய் சொல்லலாம்னு சாஸ்திரமே சொல்றது. பசுமாட்டுக்குக் கொஞ்சம் புல் கொடுத்துட்டா பொய் சொன்ன பாவம் தீர்ந்துடுமாம். நம்மாத்துல பசுமாடும் இருக்கு. நிறையப் புல்லும் இருக்கு" என்றான் கிட்டா.
"பொய் சொல்ல நீயும் இருக்கே!" என்றாள் கமலா,
இதற்குள் கனபாடிகள் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு மடியாகப் பூஜை மணையில் வந்து அமர்ந்தார்.