"ஏதோ விபரீதமான செய்தியைச் சொல்லப் போகிறாள்" என்பதை ஊகித்துவிட்ட கனபாடிகள் தளர்ந்து, தள்ளாடியபடி கமலாவைப் பின் தொடர்ந்தார்.
பாகீரதிக்கு வயிற்றைக் கலக்கியது.
இரண்டு நாட்களாகவே கமலாவின் பார்வையிலும் பேச்சிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.
’அப்பாவிடம் எதையாவது கண்டதையும் காணாததையும் சொல்லி அவர் மனசில் விஷ விதையைத் தூவி விடுவாளோ?’ என்று அஞ்சினாள்.
அப்பாவைத் தனியாக அழைத்துப் போய் கமலா என்னதான் சொன்னாளோ தெரியவில்லை. கனபாடிகள் அத்துடன் ’கப்சிப்’ பென்று அடங்கிப் பேசா மடந்தையாகி விட்டார்.
அன்று பகல் முழுதும் பாடசாலை உற்சாகமின்றி, உயிரோட்டமின்றி கலகலப்பு இன்றி ஒரு மெளனமான சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
பகல் போஜனத்துக்குப் பிறகு கனபாடிகள் தினமும் சாதாரணமாகச் சற்று நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். இன்று தூக்கம் வராததால் இப்படியும் அப்படியும் கூண்டுப் புலிபோல் நடந்து கொண்டிருந்தார். அகத்தின் சஞ்சலம் முகத்தில் தெரிந்தது. சற்றுநேரம் அப்படி நடந்துவிட்டு வால்மீகி ராமாயண புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். ராமனைப் பிரிந்த தசரதர் புத்திர சோகத்தில் மூர்ச்சையாகிவிட்டார் எள்ற வரிகளைப் படித்தபோது அவர் கண்களில் நீர் ததும்பி நின்றது.
"மூர்த்தியின் அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? ’அவனுக்கு தாய் தந்தை குரு தெய்வம் எல்லாம் இனி நீங்கள்தான்’ என்று என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறாரே, அவர் திரும்பி வந்து ’என் மூர்த்தி எங்கே?’ என்று கேட்டால் எப்படி பதில் சொல்வேன்?" என்று தவித்தார்.
ராத்திரி, கூடத்து கடிகாரம் ஒன்பது அடித்து, ராப்பிச்சைக்காரர்கள் வந்துவிட்டுப் போன