Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 07 - சாவி
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி மூலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து "ஹா. ஹா, ஹா" என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.
அந்த ஓசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி அடித்து ஓடியது.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்து சூழ்ந்த பெரும் கூட்டம் வட்டமடித்து நிற்க, ரயிலடி அழுக்குப் பையன்கள் மரத்தின்மீது அவசரமாக ஏறி ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டனர்.
சுற்றி நின்ற கூட்டத்தில் மூர்த்தியும் ஒருவன்.
கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்ததுபோல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருந்தாமல் நின்றான்.
கழுத்துச் சங்கிலியை அப்பா வாங்கிக் கொடுத்த நீலச் சட்டை போட்டு மறைத்திருந்தான். கையில் மான் தோல் பை. இப்படியும் அப்படியும் ஒதுங்கிக் கூட்டத்தின் இடுக்கு வழியாகப் பார்த்தபோது அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு கவர்ச்சியாய்த் தெரிந்தாள்.
அவன் யாரைத் தேடி ஊரை விட்டு, பாடசாலையைவிட்டு வந்தானோ, யாருடைய அழகில் மயங்கினானோ, யாருடன் நிறையப் பேசி நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ அந்த மஞ்சுவை அங்கே கண்டபோது உள்ளத்தில் ஒரு பரவசமான உணர்ச்சி பொங்கியது!
மஞ்சு, மூங்கில் கழிகளை எடுத்து அவற்றின் நுனிப் பகுதியைப் பெருக்கல் குறிபோல் இறுகக்கட்டி தரையில் குத்திட்டுப் புதைத்தாள். பிறகு ஒரு நீளமான கம்பியால் அந்தப் பெருக்கல் குறிகளை இணைத்து அந்தக் கம்பிமீது ஏறி டமார லயத்துக்கு ஏற்ப ‘பாலன்ஸ்’ செய்தபடி நடந்தாள்.
உயரத்திலிருந்து பார்த்த மஞ்சுவின் கண்களில் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்த மூர்த்தி ‘பளிச்’சென்று தென்பட அடடே, இவன் எப்படி இங்கே வந்தான்!” என்று தனக்குள் வியந்தாள்.