Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 08 - சாவி
நெய்யில் முந்திரிப்பருப்பு வறுபட்டுக் கொண்டிருந்த மணம் பாடசாலை முழுதும் ‘கமகம’த்தது. வெள்ளிக்கிழமையானதால் சுவாமி நைவேத்தியத்துக்கு அவல் பாயசம் !
கனபாடிகளும் கிட்டாவும் பசு மாட்டுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
பத்து நாட்களுக்குமுன் கொட்டிலுக்குப் ‘புது வரவு’ ஒன்று சேர்ந்திருந்தது. காவேரிப்பாக்கம் பசு ஈன்றெடுத்த அந்த ஆண் கன்றுக்கு இன்று நாமகரணம்!
உடல் முழுக்க, பட்டை பட்டையாக, திட்டுத்திட்டாக, வெள்ளையும் பழுப்பும் கலந்த வெல்வெட் வழவழப்பில் அந்த சேங்கன்று துள்ளிக் கொண்டிருந்தது.
"அடே கிட்டா ! இதுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு ! கமலாவையும் பாகீரதியையும் கூப்பிடு. அவாளையும் கேட்போம்" என்றார் கனபாடிகள்.
அவர்கள் வந்தார்கள்.
"ராஜான்னு வைக்கலாம்ப்பா" என்றாள் கமலா.
"ஸ்வாமி பேர் எதுவும் தோணலையா? நீ என்ன சொல்றே பாகீ?"
ஏதும் சொல்லத் தெரியாதவள் போல் மெளனமாய் நின்றாள் அவள்.
"நம்ப மூர்த்தி ஞாபகமாக அவன் பேரையே வெச்சடலாமே!" என்றான் கிட்டா.
கனபாடிகள் முகத்தில் ஒரு பிரகாசம் பளிச்சிட்டது. "சரி; அந்தப் பேரையே வச்சுடுவோம். எனக்கு ரொம்ப திருப்தி. பாகீ உனக்கு?"
"அவளுக்கும் பரம திருப்திதான். எனக்குத் தெரியும்" என்றான் கிட்டா.
"உனக்கெப்படிடா தெரியும்?"