"ஒரு முக்கியமான விஷயம். சாஸ்திரப் பிரச்னை, நீங்கதான் முடிவு சொல்லணும். அந்தத் தகுதி உங்களுக்குத் தான் உண்டு."
"பூர்வ பீடிகையெல்லாம் பலமா இருக்கே. விஷயத்தைச் சொல்லுங்கோ" என்றார் கனபாடிகள்.
"அத்திப்பட்டு ராமகிருஷ்ண சாஸ்திரிகள்னு கேள்விப் பட்டிருப்பேள்!"
" நன்னாத் தெரியுமே; அவர் காலமாயிட்டார் இல்லையோ?"
"ஆமாம். அவருக்கு ஒரு பெண். பார்வதின்னு பேர். கல்யாணமாகி இருபது வருஷம் ஆறது. அவளுடைய புருஷன் கல்யாணமான ரெண்டு வருஷத்துக்கெல்லாம் கடல் கடந்து பினாங்கு போனவன் இப்பத்தான் திரும்பி வந்திருக்கான். பார்வதி இத்தனை நாளும் பட்டணத்திலே யாரோ ஒரு பணக்காரர் வீட்டிலே சமைச்சுப் போட்டுண்டு காலத்தைக் கழிச்சுண்டிருந்தா. இந்த வருஷம்தான் ஊரோட வந்து சேர்ந்துட்டா, குழந்தை குட்டி கிடையாது."
"சரி, விஷயத்துக்கு வாங்க."
”திடீர்னு இப்ப அவள் புருஷன் எங்கிருந்தோ வந்து முளைச்சிருக்கான்.”
"அப்புறம்?..."
"கெட்டழிஞ்சு வந்திருக்கான். யாரோ மலாய்க் காரியைக் கல்யாணம் பண்ணிண்டானாம். அவளும் போயிட்டாளாம். நிறையப் பணம் காசோட வந்திருக்கான். மறுபடியும் பார்வதியோட சேர்ந்து வாழப் போறேங்கறான்…"
"பார்வதி என்ன சொல்றா?"
‘ஊர் ஒத்துக்குமா’ன்னு கேட்கிறா."