வேண்டியதுதானே!"
கனபாடிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டது.
"என்ன சொல்றிங்க நீங்க? சாஸ்திரத்தையே மாத்தணுங்கறேளா? பேஷ் ! சாஸ்திரங்கறது உங்க வீட்டு ஈயப் பாத்திரம்னு நினைப்பா? உங்க இஷ்டம்போல அழிச்சு மாத்தறதுக்கு. அது ஒரு பிரமாணம், யுகம் யுகமாய் மாறாமல், மாற்றாமல் இருந்து கொண்டிருக்கிற வேதப் பிரமாணம். சூரியனையும் சந்திரனையும் மாத்தணும்னு சொல்றது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் சாஸ்திரங்களை மாத்தணுங்கறதும். எப்பவோ ஏற்பட்ட சாஸ்திரம் இப்ப நமக்குப் பொருத்தமா யில்லேன்னா, நம்ம இஷ்டத்துக்கு அது வளைஞ்சு கொடுக்கலேன்னா, அதுக்காக மூலத்தையே மாத்திடறதா!"
"ஏன், முடியாதா? கூடாதா?" என்று கேட்டது ஒரு குரல்.
"ஒரு தேசத்துல கடுமையான வெய்யில் தகிக்கிறது. இன்னொரு தேசத்துல தாங்கமுடியாத குளிர் நடுக்கறது. இந்த இரண்டு இடத்துக்குமே சூரியன் பொதுவானவன். அந்தந்த இடத்துக்குக் தகுந்தாப்பலதான் சூரிய வெப்பம் இருக்கணும், அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு சூரியனைச் சிருஷ்டி பண்ணணும்னு சொன்னா அது எப்படி சாத்தியமில்லையோ, அது மாதிரிதான் சாஸ்திரத்தை மாத்தணுங்கறதும். பூர்வ ஜன்ம பலனை இந்த ஜன்மத்துல அனுபவிக்கிறோம். அது அவரவர்களுடைய பாவ புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி அமையறது. அதை அனுபவிச்சு தான் தீரணும். சாஸ்திரம் எல்லா யுகங்களுக்கும் பொதுவானது. கால தேச வர்த்தமானத்துக்கு ஏத்த மாதிரி அதை மாத்திண்டிருக்க முடியாது. இது சத்தியம், வேதவாக்கு" என்றார் கனபாடிகள்.
"அப்ப பார்வதிக்கு மறுவாழ்வு கிடையாதுங்கறேள்! அதுதானே உங்க தீர்ப்பு?" என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டு முன்னால் வந்து நின்றார் ஒருவர்.
"என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? நீங்க தானே சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு என்னைக் கேட்க வந்தேள்? நான் சத்தியத்தைச் சொன்னேன்."
ஆமாம்; உங்க சொந்த விஷயத்துல மட்டும் அக்க சாஸ்திரம் கிடையாதாக்கும்?" என்று கடுக்கன் ஆசாமி ஒருவர் வெடுக்கென்று கேட்டார்.