செருப்பை மிதித்த மாதிரி "ஸ்ஸ்ஸ்ஸ்" என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தது.
"என்ன சொன்னீங்க?" கனபாடிகள் குரலில் ஒரு ஆக்ரோஷம் தொனித்தது.
"உங்க சொந்த விஷயத்துலே மட்டும் அந்த சாஸ்திரம் கிடையாதான்னு கேட்கிறோம். உங்க பெண் பாகீரதி மாங்கல்யம் இழந்தவதானே?" அவள் மட்டும் தலைமயிரை எடுக்காமல் இருக்கலாமோ? அது சாஸ்திர விரோதமில்லையோ? உங்க சாஸ்திரம் அதுக்கு மட்டும் ஒத்துக்கறதாக்கும். வாங்கய்யா போகலாம். இவரிடம் என்ன பேச்சு?" என்று ஆவேசமாய்ப் பேசிவிட்டுப் புறப்பட்டார் அந்தக் கடுக்கன்.
மற்றவர்களும் புறப்படத் தயாரானார்கள்.
"நாராயண நாராயண" என்று காதைப் பொத்திக் கொண்டார் கனபாடிகள்.
அந்த அக்னிக் கணைகளை தாங்கிக் கொள்ளும் சக்தி அற்றவராய் நெருப்பில் விழுந்த புழு மாதிரி துடித்துப் போனார்.
துடித்துத் துவண்டு, தவித்துத் தடுமாறி இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டார்.
கிட்டா அவரை ஆதரவாக அணைத்து அழைத்துக் கொண்டு போய் ஊஞ்சலில் உட்கார வைத்தான்.
"மனசை வாட்டிக்காதீங்க" என்றான்.
"சாஸ்திரம் அறிந்தவன், யாகம் செய்தவன், பிராம்மணோத்தமன் என்றெல்லாம் பெயரெடுத்து என்ன பிரயோஜனம்? என்னைப் பார்த்து இப்படிக் கேட்டு விட்டார்களே!" என்று உருகிப் போன கனபாடிகள் தம்மைச் சுதாரித்துக் கொண்டவராய் "உம், சரி பரவாயில்லே; அவா சொல்றதுலேயும் தப்பு இல்லே. அவாளையெல்லாம் உள்ளே அழைச்சுண்டு வா. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்னு சொல்லு. வீடு தேடி வந்தவர்களைப் பட்டினியோடு அனுப்பக்