“கன்னுக்குட்டிக்கு மூர்த்தி பேரை வைக்கலாம்னு நேத்தே அவள் எங்கிட்ட சொல்லிட்டாளே!"
"ஒகோ, ஏற்கனவே தீர்மானம் ஆயிட்டுதோ!" என்றார் கனபாடிகள்.
கிட்டா எங்கேயோ ஒடிப்போய் கன்றுக் குட்டிக்குத் தர ‘பசும்புல்’ கொண்டு வந்தான்.
"இதை உன் கையாலேயே கொடுடா! உனக்கு ரொம்பப் புண்ணியம்" என்றார் கனபாடிகள்.
சேங்கன்று அதை ஆவலாய்ச் சாப்பிட்டது.
"நம்ப மூர்த்தி இப்போ எங்கே இருக்கானோ? யார் அவனுக்கு சாதம் போடறாளோ?" என்று கனபாடிகள் துக்கப் பட்டார்.
இச்சமயம், பாடசாலைப் பையன் ஒருவன் ஓடி வந்து, "உங்களைப் பார்க்க வாசல்லே யாரோ கும்பலா வந்திருக்கா. பக்கத்து அக்கிரகாரமாம்!" என்றான்.
"திண்ணையில உட்காரச் சொல்லு, இதோ வந்துட்டேன். முதல்ல எல்லோருக்கும் மோர் கொண்டு போய்க் கொடு" என்றார்.
கனபாடிகள் வாசலுக்கு வந்தபோது அவர்கள் எல்லோரும் பவ்யமாக எழுந்து நின்றார்கள்.
"பக்கத்தூர்லேந்து வறோம்" என்றார் ஒருவர்.
அப்படிச் சொன்னவரைப் பார்த்து, "நீ வெங்கடேச தீட்சிதர் பிள்ளை இல்லையோ? உன்னைப் பார்த்திருக்கேன். இத்தனை பேரும் எங்க இந்த வெய்யில் வேளையில?...."
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வெங்கடேச தீட்சிதர் மகன்தான் பேசினார் :