இதற்குள் இடியும் மின்னலுமாய்ப் பேய் மழை கொட்டத் தொடங்கவே அத்தனை கூட்டமும் ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டது. மழையில் தெப்பலாய் நனைந்து நின்ற மஞ்சுவைத் தொடர்ந்து முர்த்தியும் போய் நின்றான்.
"வேற சட்டை வச்சிருக்கியா?" என்று கேட்டாள் மஞ்சு,
"இல்ல."
"ராத்திரி எங்க தங்கப்போறே?"
"உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன். ‘தேடப் போன மருந்து காலிலே சிக்கின மாதிரி’ நீ இங்கயே கிடைச்சுட்டே !"
"முதல்ல தலையைத் துவட்டிக்கோ, இந்தா டவல் ! மழை நின்னதும் ராஜா சத்திரம் போலாம். அங்கதான் நானும், அப்பாவும் தங்கியிருக்கோம்."
இது யார்? உங்கப்பாவா?"
"ஆமாம்; வயசாயிட்டுது. வரவர கண்ணும் தெரியலே; காதும் கேட்கலே. நய்னா நான் சொன்னனே… ஆத்துல ஒருத்தர் முழுகிட்டார்னு இவர்தான் அது !"
"பிராமணப் பிள்ளையா?”
"ஆமாம்; வேதம் படிக்கிறார்."
"உங்க மகதான் என்னைக் காப்பாத்தினார். அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தினா. இன்னைக்கு என் மணிபர்ஸைக் காப்பாத்தினா!" என்றான் மூர்த்தி.
"மழை நின்னுட்டுது. வாங்க சத்திரத்துக்குப் போவோம்" என்றான் கிழவன்.