"ஆமாம்."
”ஏன்?”
"அதை மட்டும் கேட்காதே! என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி அது. சொல்லவே கூடாத பரம ரகசியம் அது" என்றான்.
"கழைக் கூத்தெல்லாம் கத்துக்கணும்னா, முதல்ல உடம்பை வில்லா வளைக்கத் தெரியணும். அதுக்கு தினம் தினம் ‘கவாத்து‘ செய்யணும். நாளைக்கே நீ இந்தக் குடுமியை எடுத்துட்டு தியாகராஜபாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமி வச்சக்கணும். அப்புறம் உன் கழுத்துல கறுப்புக் கயிறு முடிஞ்சு கையிலே தாயத்து கட்டி விட்டுருவேன். அதுதான் உனக்கு ரட்சை சம்மதமா?" என்று கேட்டாள்.
மூர்த்தி சற்று யோசித்தான். ஒரு கணம் தன்னைக் கழைக்கூத்தாடி கோலத்தில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். கண்களில் கனபாடிகள் தெரிந்தார். ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
சம்மதம் என்ற பாவனையில் தலையசைத்தான்.
அப்புறம் அவன் ஆனந்தா லாட்ஜ் போய் சாப்பிட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு புதிய தாழம்பாய் வாங்கி வைத்திருந்தாள் மஞ்சு.
அவன் திரும்பி வந்ததும் "இந்தா, இந்தப் பாயில படுத்துத் தூங்கு. அந்த மான் தோல் பையைத் தலைக்கு வச்சுக்க . மணிபர்ஸ் ஜாக்கிரதை !" என்றாள்.
தூரத்து டீக்கடையில் கிட்டப்பா ‘கோடையிலே’ பாடிக் கொண்டிருந்தார்.
பழக்கமில்லாத சூழ்நிலையில் தூக்கம் வரவில்லை அவனுக்கு. அடங்கியிருந்த மழை நடுநிசிக்கு மேல் மீண்டும் கொட்டத் தொடங்கியது. மழைச்சாரல் தாழ்வாரத்தை நனைத்ததுடன் மூர்த்தி கால்களையும் ஈரமாக்கியது. அவன் நகர்ந்து போய்ச் சுவரோரம் முடங்கிக் கொண்டான்.