அதேசமயம், மூர்த்தியின் சட்டைப் பையிலிருந்த மணிபர்ஸை யாரோ ஒருவன் ஜேப்படி செய்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட மஞ்சு சட்டென்று கீழே குதித்து, கூட்டத்துக்குள் பாய்ந்து அந்த ‘ஜேப்படி’யின் தலைமயிரைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வந்து ஓங்கி ஒர் அறை கொடுத்தாள்.
"திருட்டுப் பயலே ! எடுடா அந்த மணிபர்ஸை !" என்றாள். அவன் திமிறிக்கொண்டு ஒடப் பார்த்தான்.
"தப்பி ஓடப் பாக்கறயா? இது உடும்புப் பிடி. இதிலிருந்து நீ அவ்வளவு லேசாத் தப்பிட முடியாது" என்று அவனை ஓர் உலுக்கு உலுக்கினாள்.
அருகில் நின்ற போலீஸ்காரரை விறைப்பாகப் பார்த்து, "என்னய்யா தாணாக்காரரே! திருடனைக்கூடப் பிடிக்காம அங்கே யாரைப் பார்த்து இளிச்சிட்டு நிக்கறிங்க? இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போய் நாலு போடு போடுங்க. அப்பத்தான் புத்தி வரும் இவனுக்கு" என்றாள்.
இதற்குள் "ஐயோ, அது என் மணிபர்ஸ் !" என்று அலறிக்கொண்டு ஓடிவந்தான் மூர்த்தி.
மஞ்சு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "வெள்ளத்தில் முழுகின ஆளில்ல நீ! இங்க எங்க வந்தே?" என்று கேட்டாள்.
"உன்னைப் பார்க்கத்தான்."
"முதல்ல இந்த பர்ஸை வாங்கிக்க; வித்தை முடிஞ்சதும் பேசலாம்! ”
திடீரென்று வானம் இருண்டு எந்த நிமிடத்திலும் மழை வரும்போல் ஒரு சூழ்நிலை உருவாகி, புழுதிக்காற்று வீசவும் கூட்டம் மளமளவென்று கலையத் தொடங்கிற்று. ‘வசூல் போச்சே!’ என்ற ஏமாற்றத்தில் கிழவன் முகம் கறுக்க அவசரமாக "தருமவான்களே, தாய்மார்களே!" என்று டால்டா டப்பாவைக் குலுக்கிக்கொண்டு ஓடினான்.