அத்தனை அக்கறை? இந்த மாதிரி எதுக்கு ஒரு கேள்வி? கமலா அந்த ’அவலை’ மென்று பார்த்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை.
”அவன் எங்கடா போயிருப்பான்?"
”சொல்ல மாட்டேன்னுட்டானே! என்னமோ ஒரு விரக்தியோடு பேசறானே. உலகமே அஸ்தமிச்சுட்டாப்ல ஒரு மூஞ்சி"
"ஏதாவது சாப்பிட்டானா? கையிலே காசு வெச்சிருக்கானா? கழுத்திலே சங்கிலி இருந்ததா?" (’வழவழ’ன்னு எத்தனை அழகான கழுத்து, தந்தத்தால் செய்தாப்பல! அவன் பொன்மேனிக்கும் அந்த செயினுக்கும் எத்தனை பொருத்தம் நான் கூட கொஞ்சம் நிறம் மட்டுதான்!)
"அவனும் நானும்தான் ஆனந்தா லாட்ஜ்ல சாப்பிட்டோம். ரொம்ப வைதிகமான ஓட்டல். பின் கட்டிலே ஆசாரமா மணை போட்டு, வாழை இலை போட்டு பரிமாறினா"
”என்ன சாப்டீங்க?"
"காசி அல்வா, ரவாதோசை, தோசைக்கு கொத்சு, டிகிரி காப்பி."
"வித்தியார்த்திகள் சுகம் நாடக் கூடாதுன்னு சொல்லிட்டு காசி அல்வா மட்டும் சாப்பிடலாமா? அது சுகம் இல்லையோ?"
"அதென்னவோ, நீ அவனையே கேளு, வந்தால்."
"வருவான்னு நினைக்கிறயா கிட்டா நீ?"
"தெரியலையே; ஒடிப் போனவனைப் பத்தி உனக்கென்ன இத்தனை கரிசனம் ! போனாப் போறான்!"
"மனசு கேக்கலைடா! அப்பா வந்தா என்ன பதில் சொல்வேன்? மூர்த்தி ஏன் போனான், எதுக்குப் போனான்? இங்கே என்ன நடந்ததுன்னு ஆயிரம் கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துடுவாரே!