"சீக்கிரம் வந்துடறயா?"
"…ம்"
அழுது அழுது பாகீரதியின் முகம் விகாரமாய் வீங்கிப் போயிருந்தது. கண்கள் சிவந்து இரப்பைகள் உப்பலாகியிருந்தன. மணி பத்துக்கு மேல் ஆகியும் சமையல் வேலையில் நாட்டமின்றி ‘மூர்த்தி வந்து விட்டானா?’ என்று அடிக்கொருமுறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காகங்கள் விடாமல் கத்திக் கொண்டிருந்தன. ’காக்கா கத்தினா யாராவது விருந்தாளி வருவான்னு சொல்வாளே! யார் வரப் போறா?’ பாகீரதி யோசித்தாள்.
எதிர்பாராத விதமாய் வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து கைக்குழந்தை அம்புலுவோடு அக்கா கமலா இறங்குவதைக் கண்டதும் ’இவள் எதற்கு இப்போது இங்கே வந்து நிற்கிறாள்?’ என்று ஆச்சரியப்பட்டாள்.
பலாப்பழம், புளிமுட்டை, பரங்கிக்காய், வாழைத்தார் எல்லாவற்றையும் வண்டிக்காரன் இறக்க, பாடசாலைப் பிள்ளைகள் அவற்றை ஏந்திக்கொண்டு போய் உக்கிராண அறையில் வைத்தார்கள்.
"வா, கமலா என்ன இப்படி திடீர்னு? காஞ்சீபுரத்திலிருந்தா வறே? அப்பா வரலையா?" என்று கேட்டாள் பாகீரதி.
"அப்பா வரத்துக்கு இன்னும் நாலு நாள் ஆகும். பெரியவா இருக்கச் சொல்லிட்டாளாம். அப்பாதான் சொல்லி அனுப்பினார். ’பாகீரதியைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். நீ போய் நான் வர வரைக்கும் அவளுக்குத் துணையா இருந்து கவனிச்சுக்கோ. முனியம்மாவை வந்து துணைக்குப் படுத்துக்கச் சொன்னேன். வராளோ, இல்லையோ – கவலையாயிருக்கு’ என்று."
"உன் ஆத்துக்காரர் வரலையா?"
“கோர்ட்ல கேஸ் இருக்காம். நீ மட்டும் போயிட்டு வான்னுட்டார். என்ன வக்கீல் வேலை