வேண்டியிருக்கு?"
"உன் மாமியார் காஞ்சீபுரத்தில்தானே இருக்கா?"
“ஆமாம்; வேலூரிலேருந்து என் நாத்தனார் வேற வந்திருக்கா. எனக்கும் உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. ஓடி வந்துட்டேன்."
"அப்பா வர இன்னும் நாலு நாள் ஆகுமா?" என்று பாகீரதி கவலைப்படுவதுபோல் பாசாங்காய்க் கேட்டபோதிலும் உள் மனம் நிம்மதியாக ’அம்மாடி!’ என்றது.
குழந்தை அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.
"அம்புலுவைக் கொடு இப்படி, பசி போல இருக்கு, பாவம், குழந்தைக்கு, (அம்புலுக்கண்ணு! ஒடியா!) பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன். கிண்டிகூட இங்கதான் இருக்கு. போனதடவை நீ இங்க வந்திருந்தப்போ மறந்துட்டுப் போயிட்டாயே!”
"என்னடி உன் கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு?"
”உரலில் மிளகாய்ப்பொடி இடிச்சேன். கண்ணிலே பட்டுட்டுது. எரிச்சல் தாங்கலை."
"அவன் எங்கடி?" கமலாவின் கண்கள் வீட்டைத் துருவின.
"எவன்? யாரைக் கேட்கிறே?"
"மூர்த்தியைத்தான்."
"கார்த்தாலே போனவன்தான். இதோ குளிச்சுட்டு வந்துடறேன்னு போனான். மணி பத்தாகப் போறது. இன்னும் காணல்லே. அப்பா இல்லையோன்னோ? பூஜையும் இல்லே. இஷ்டம்போல வருவான்."
"ஆத்தங்கரைக்கு யாரையாவது அனுப்பி தேடிப் பாக்கறது தானே?"