மூர்த்தி இஷ்டமில்லாமல் பாயைக் கொண்டு போய் பின்கட்டுத் தாழ்வாரத்தில் போட்டுக் கொண்டான். கார்த்திகை மாதத்துக் குளிர் நிலவு முற்றமெங்கும் வெள்ளி முலாம் பூசியிருந்தது. தோட்டத்துக் கொட்டிலில் மாட்டுச் சலங்கைகளின் கிண்கிணி ஓசை காதுக்கு இனிமையாக ஒலித்தது. தூரத்தில், எங்கோ கோயில் உற்சவம் நடப்பதை அறிவிக்கும் அதிர்வேட்டுச் சத்தங்கள்!
மூர்த்தி பத்மாசனமாக உட்கார்ந்து தியானம் செய்து முடித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டபோது பல்லி ஒன்று அவன் இடது புஜத்தின் மீது விழுந்து ஓடியது. "ஐயோ! பல்லி தோள் மீது விழுத்தால் நல்லதா, கெட்டதா, தெரியலயே" என்று கவலைப் பட்டான்.
பாகீரதி பாத்திரங்களை அலம்பி, பாலுக்கு உறை ஊற்றி, கதவுகளைத் தாளிட்டுவிட்டு மூர்த்தி அருகில் வந்து நின்று, தூங்கி விட்டானா என்று பார்த்தாள். போர்வையால் குளிருக்கு அடக்கமாகத் தன்னைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான் அவன். பாகீரதி அமிர்தாஞ்சனக் குப்பியை எடுத்துவந்து சற்றும் கூச்சமின்றி அவன் அருகில் சுவாதீனமாக நெருங்கி உட்கார்ந்து ”தூங்கிட்டயா மூர்த்தி?” என்று கொஞ்சலாகக் கேட்டுக் கொண்டே அவன் நெற்றியில் தேய்த்து விட்டாள்.
பாகீரதி உடம்பில் சூடு தெரிந்தது. மல்லிகைப்பூ வாசனை வீசியது. அவன் நெளிந்து விலகினான்.
"மல்லிப்பூ வாசனை அடிக்கிறதே!"
“ஆமாம்; என் தலையைப் பாரு" என்றாள்.
"நீ பூ வச்சுக்கலாமா, பாகீ!"
"ஏன்? நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?
"நீ. நீ ...வந்து." அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
"பூ வைத்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்றயா? சின்ன வயசிலயே எங்கப்பர எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டார். கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளேயே எனக்குத் தாலி